யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்சிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நிலையில், படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகள் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவல் தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

Continues below advertisement

கிடைத்துள்ள தகவலின்படி, டாக்சிக் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் இன்னும் விற்பனையாகவில்லை எனக் கூறப்படுகிறது. யாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான KVN Productions தரப்பில் எதிர்பார்க்கப்படும் தொகையை வழங்க ஓடிடி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த தகவலுக்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

ரூ.500 கோடி பட்ஜெட்

டாக்சிக் திரைப்படம் இந்திய சினிமாவின் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.500 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் திரையரங்க வசூல் மட்டுமின்றி, திரையரங்குக்கு வெளியான வருவாயான ஓடிடி, சாட்டிலைட் மற்றும் பிற உரிமைகள் மூலமான வருவாயும் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

யாஷ் இப்படத்தில் நடிப்பதுடன், எழுத்துப் பணியிலும் பங்களித்துள்ளார். KGFபடங்களுக்குப் பிறகு இந்திய அளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறியுள்ள யாஷ், இந்தப் படத்தின் மீது அதிகளவில் ஈடுபாடு கொண்டுள்ளார்.

படக்குழு

மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள டாக்சிக் திரைப்படத்தில் யாஷுடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஜே.ஜே. பெர்ரி, அன்பறிவு உள்ளிட்ட பல முன்னணி ஸ்டண்ட் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளில் DNEG நிறுவனமும் ஈடுபட்டுள்ளது.

பலமுறை தள்ளிப்போன ரிலீஸ்

டாக்சிக் படத்தின் வெளியீட்டு தேதியும் ஏற்கனவே பலமுறை மாற்றப்பட்டுள்ளது. முதலில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் பின்னர் மார்ச் 19, 2026 என மாற்றப்பட்டது. அதன் பிறகு ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில், இறுதியாக ஆகஸ்ட் 26, 2026 வெளியீடு என அறிவிக்கப்பட்டது. இதனால் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஓடிடி விற்பனைக்கு ஏன் தயக்கம்?

ஒரு படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் பொதுவாக அதன் நட்சத்திர மதிப்பு, பட்ஜெட், முந்தைய படங்களின் வசூல், திரையரங்கு வியாபாரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பார்வையாளர் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும்.

டாக்சிக் போன்ற மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் தரப்பு எதிர்பார்க்கும் தொகையும் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போதைய ஓடிடி சந்தையில் மிகப்பெரிய தொகையை கொடுத்து உரிமைகளை வாங்க நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதனால் வெளியீட்டுக்கு இன்னும் சுமார் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் விற்பனையாகவில்லை என்ற தகவல் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி நேரத்தில் குறைந்த விலைக்கு விற்பனையாகுமா?

இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் படக்குழுவுக்கு கடைசி நேரத்தில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். எதிர்பார்த்த விலைக்கு வாங்குபவர்கள் முன்வராத பட்சத்தில், குறைந்த விலைக்கு ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகளை விற்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.