உண்மையான மக்களாட்சி எக்காலத்திலும் மலரப் போவதில்லை என தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பற்றி இயக்குநரும், பாமக நிர்வாகியுமான தங்கர் பச்சன் காட்டமாக விமர்சித்துள்ளார். 

Continues below advertisement

ஏப்ரல் 23ம் தேதியான நாளை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டியானது நிலவுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை சார்ந்த பிரபலங்கள் பலரும் வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டனர். 

அந்த வகையில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட தங்கர் பச்சன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். தொடர்ந்து பாமக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

அதில், “நாற்பது கோடிகள் இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும் எனும் கேடுகெட்ட நிலைக்கு அரசியலை கொண்டு சென்று விட்டார்கள்! செலவழித்தப் பணத்தை திருப்பி எடுக்கவும், மேலும் கொள்ளை அடித்து அடுத்த தேர்தலை சந்திக்கவும் மட்டுமே ஐந்தாண்டுகள் வேலை செய்வார்கள்! இதில் மக்களாட்சிக்கு இனி என்ன வேலை இருக்கப் போகின்றது?

இனிமேல் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தை விட்டுவிட வேண்டியதுதான்.

அனைத்து திருட்டுத்தனங்களையும் செய்வதற்கு மக்கள் கேள்வி கேட்காதவாறு அவர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ளும் சூழ்ச்சியை அறிமுகப்படுத்திய கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் வரை உண்மையான மக்களாட்சி எக்காலத்திலும் மலரப் போவதில்லை!” என தெரிவித்துள்ளார். 

முன்னதாக மற்றொரு பதிவில், “நான் பரப்பரை செய்து வரும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய மனமாற்றத்தை மக்களிடம் காண்கிறேன். அதிகார பலம், பண பலம் இவற்றையெல்லாம் கடந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே தீரும் என்பதை கணிக்க முடிகிறது!” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.