TVK Vijay: முதல் தேர்தலிலேயே டூப்பா? - இதெல்லாம் பெரிய அவமானம்.. விஜயை விளாசிய சேரன்!
முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் அந்த தலைவன் தலைமை எங்கே.. சிந்தியுங்கள் மக்களே.. என தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்து இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜயின் உருவபொம்மை வைத்து அக்கட்சி வேட்பாளர் சட்டமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொண்ட சம்பவத்தை இயக்குநர் சேரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவிக்கும் தவெக வேட்பாளர்கள்
ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை புதிதாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 234 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். ஆனால் வேட்புமனு பரிசீலனையில் சேலம் எடப்பாடி தொகுதி வேட்பாளரின் வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 233 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது. இப்படியான நிலையில் விஜய் சென்னை பெரம்பூர், கொளத்தூர், திருச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே இதுவரை தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். இன்னும் 2 வார காலம் மட்டுமே உள்ளதால் தங்களுக்கு வாக்கு கேட்டு விஜய் வருவாரா அல்லது என்ன செய்யப் போகிறார் என்பது தெரியாமல் தவெக வேட்பாளர்களும், தொண்டர்களும் திணறி வருகின்றனர்.
விஜய் பொம்மையுடன் நூதன பரப்புரை
இப்படியான நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் என்.எஸ். விஜி, விஜய்யின் பொம்மையுடன் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனை இயக்குநர் சேரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல்.. இந்த பரப்புரை நிலை சரிதானா.. இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளையும் பம்பரமாக சுற்றியிருக்க வேண்டாமா. அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப் வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்த தலைமைக்கு... நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமர போகிறார்கள் தினமும்... நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர் தோல்வியை சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து, கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார்.
அந்த தலைவன் எங்கே முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே.. சிந்தியுங்கள் மக்களே... நீங்கள் யார் வேண்டுமா வேண்டாமா எனக்கேட்ட ஐயா ஸ்டாலின் அவர்களே இந்த வயதில் இறங்கி நடந்து பிரச்சாரம் செய்கிறார்.. ஆனால் நீங்கள் ஒரு மணி நேரம் தான் அனுமதி என காரணம் சொல்லி பிரச்சாரத்தை ரத்து செய்கிறீர்கள்... இப்போ சொல்லுங்க மக்களே.. நிஜப்போட்டி திமுக Vs நாதக தானே” என தெரிவித்துள்ளார். சேரனின் இந்த பதிவு மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.























