சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 18) எபிசோடில் விசாலாட்சி அம்மா பேர பிள்ளைகளிடம் வந்து என்ன "பெரியவங்கனு மரியாதையே இல்லாம பேசுறீங்களாம்" என கேட்கிறார். "அவங்க ஒன்னும் தப்பா பேசலை. என்னோட நிலைமை அவ்வளவு மோசமா இருக்கு அதுதான் பேசுறாங்க" என்கிறாள் ஆதிரை. 



"ஓடிப்போக சொல்லி ஐடியா குடுக்குதுங்க இதுங்க.  இந்தா இதை பாரு மைதா மாவு பொம்மையாட்டம் இருக்கு அது என்ன ரகம் என்றே தெரியல. இவங்க அம்மா இதுகல யாரை நினைச்சு பெத்தாலோ தெரியல எதுவுமே எங்க அண்ணன் கலை போல இல்லவே இல்லை" என அநாகரீகமாக ஈஸ்வரியை பற்றி பேச எகிறி கொண்டு அவளை அடிக்க போகிறான் தர்ஷன்.  


"எங்க அம்மாவை பத்தி எப்படி இவ தப்பா பேசலாம். இவ எல்லாம் ஒரு பொம்பளையா?. மரியாதையா இங்க இருந்து போயிடு" என ஜான்சியை மிரட்டுகிறான் தர்ஷன். ரேணுகாவும் நந்தினியும் ஜான்சியை திட்டுகிறார்கள். "வயசு பையன் கையாள அடி வாங்கி அசிங்கப்பட்டு போகாத" என சொல்கிறார்கள் நந்தினி. 



"இந்த வீட்ல இவங்க இருக்குறது எனக்கு பிடிக்கல" என்கிறாள் தாரா. "பிடிக்கலைன்னா வீட்டை விட்டு ஒடுங்கடி" என்கிறார் விசாலாட்சி அம்மா. "நாங்க எதுக்கு போகணும்? இது எங்க வீடு அவங்கள வேணா போக சொல்லுங்க" என்கிறாள் தாரா. "உங்க பெரியப்பா வரட்டும் எல்லாருக்கும் ஒரு முடிவு கட்டுவான்" என்கிறார் விசாலாட்சி அம்மா. "ஆதிரை இந்த திருவிழாவுக்கு ஊர் பெரியவங்க எல்லாரும் வருவாங்க. அவங்க எல்லார் முன்னாடியும் வச்சு உனக்கு மறு தாலி காட்ட வைச்சுடலாம். அதுக்கு அப்புறம் உன்னோட குடும்பத்தை ஒழுங்கா நடத்து" என்கிறார் விசாலாட்சி அம்மா. 


ஜனனியும் சக்தியும் வீட்டுக்கு வருகிறார்கள். ஜனனி மிகவும் கவலையாக இருக்கிறாள். "கிருஷ்ணன் எல்லாமே பிளான் பண்ணி தான் செய்து இருக்கிறான். ஒன்பது யூனிட்டை ஏற்கனவே வாங்கிவிட்டேன். நேரம் பார்த்து இந்த யூனிட்டையும் கைப்பற்றிவிட்டான். அவனை எதிர்க்க வேண்டும் என்றால் அவனுடைய பேக் கிரவுண்ட் விசாரித்த பிறகு தான் பிளான் செய்யணும். நான் என்னோட சவாலில் ஜெயிக்கணும்" என்கிறாள் ஜனனி.


இவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டதை பார்த்த அனைவரும் வந்து ஜனனியை ஆஹா ஓஹோ என பாராட்டுகிறார்கள். சீக்கிரமாக பேக்டரி திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த சொல்லி சொல்கிறார்கள். நடந்த விஷயம் எதையும் அவர்களிடம்  சொல்ல வேண்டாம் என சக்தியிடம் சொல்லிவிடுகிறாள் ஜனனி. 



கதிர் வீட்டுக்கு வந்து விடுகிறான். ஞானம், கரிகாலன் என மூவரும் ஒன்றாக உட்கார்ந்து இருக்கும் போது ஜான்சி ராணி வீட்டில் நடந்த விஷயங்களை பற்ற வைக்கிறாள். ஈஸ்வரி வெளியில் போன விஷயம் பற்றியும் ஜனனியும் சக்தியும் வெளியில் சென்று பின்னர் வீடு திரும்பும் போது முகத்தை தொங்கபோட்டுக்கிட்டு வந்தது பற்றியும் சொல்கிறாள். மற்றவர்கள் அனைவரும் மாடியில் ஏதோ மீட்டிங் நடத்தி கொண்டு இருக்கிறார்கள் என்கிறாள் ஜான்சி ராணி. 


கதிர் அமைதியாக இருக்க ஞானம் என்ன நடந்தது என அவனிடம் கேட்கிறான். வீட்டுக்குள் பேசினால் சரிப்படாது வெளியில் போய் பேசலாம் என வாசலுக்கு அழைத்து செல்கிறான் கரிகாலன். அங்கேயும் சென்று கதிர் அமைதியாகவே இருக்கிறான். அக்கம் பக்கம் எல்லாம் சுற்றி பார்த்து கொள்கிறான். இவர்கள் மூவரும் என்ன பேச போகிறார்கள் என்பதை ஒட்டுக்கேட்பதற்காக தயாராக இருக்கிறாள் ஜான்சி ராணி. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.