விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி, ஈஸ்வரி, பாக்கியா எல்லோரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். நிலா பாப்பாவுக்கு காய்ச்சல் சரியாகாததால் அனைவரும் வருத்தமாக இருக்கிறார்கள். சாயங்காலம் வரைக்கும் பார்க்கலாம் சரியாகவில்லை என்றால் டாக்டரின் அழைத்து செல்லுங்கள் என ஈஸ்வரி சொல்கிறார். 



பாக்கியா சோகமாக இருப்பதை பார்த்த எழில் என்ன ஆச்சு என கேட்கிறான். "கேன்டீனில் நடந்தை பற்றியே யோசித்து கொண்டு இருக்காதே" என ராமமூர்த்தி சொல்கிறார். "ஒரே மாதத்தில் இரண்டு முறை தப்பு நடந்துடுச்சு. இது என்னுடைய தப்பு தான், நிறைய வேலை செய்வதால் என்னால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை" என பாக்கியா வருத்தப்படுகிறாள். அதனால் தான் ஒரு முடிவு எடுத்து இருப்பதாக சொல்கிறாள். " நான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸை விட்டுடலாம்" என நினைக்கிறன் என சொல்கிறாள். 


 



"அதுவும் சரிதான் காலை 4 மணிக்கு எழுந்து நைட் 12 மணி வரைக்கும் வேலை பாக்குற. இதை விட்டுட்டா உனக்கு ரெஸ்ட் எடுக்க கொஞ்ச நேரம் கிடைக்கும்" என்கிறார் ஈஸ்வரி. "கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு ஆனா கேன்டீன் கைவிட்டு போயிட்டா ரொம்ப சிக்கலாகிவிடும்" என்கிறாள் பாக்கியா. 


எழில், நிலாவை மடியிலேயே வைத்து இருக்கிறான். அமிர்தா வந்து கால் வலிக்க போகுது கீழே படுக்க வைங்க என சொன்னாலும் கேட்காமல் மடியிலேயே வைத்து கொள்கிறான். நிலா பாப்பாவுக்கு காய்ச்சல் குறையாததால் எழில் கண் கலங்குவதை பார்த்த அமிர்தா கிண்டல் செய்கிறாள். 


பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கடைசி நாள் என்பதால் அனைவரும் வாழ்த்தி விடை தருகிறார்கள். பழனிச்சாமி பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்கிறார். இங்க கிளாஸ்ல சொல்லி தரும் விஷயங்களை நாங்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். நீங்கள் கவலைப்படாதீர்கள் என தைரியம் கொடுக்கிறார் பழனிச்சாமி.


 



கிளாசில் இருந்து வீட்டுக்கு வந்ததும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்ஸை ரொம்ப மிஸ் பண்ணுவேன் என சொல்லி கொண்டே இருக்கும் போது பழனிச்சாமியும் லோபிகாவும் பாக்கியாவின் வீட்டுக்கு வருகிறார்கள். இன்றைக்கு கிளாசில் நடந்த விஷயங்களை சொல்லி கொடுக்கிறார்கள். 



இனியா அவளுடைய ப்ரெண்டுடன் வெளியே நின்று போனில் பேசிக்கொண்டு இருக்கிறாள். அப்போது கோபி அந்த வழியாக வரவே இனியாவை அழைத்து பேசுகிறார். "யாரோட பைக் இது அழகா இருக்கிறது" என கேட்க இனியா "இது பழனிச்சாமி அங்கிள் பைக்" என சொல்கிறாள். அதை கேட்டு அதிர்ச்சியான கோபி என்ன விஷயம் என கேட்கிறார். பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் இருந்து நின்று விட்டதால் சொல்லி கொடுப்பதற்காக வந்துள்ளார்கள் என்கிறாள். இது தான் ஆரம்பம் என நினைத்து சந்தோஷப்படுகிறார் கோபி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.