திரையுலகில் பாலியல் சீண்டல் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான நடிகைகள் பலர், கடந்த சில ஆண்டுகளாக அதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அப்படி தாங்கள் சந்தித்த கொடுமைகளை உலகிற்கு தெரியப்படுத்தியவர்களுள் ஒருவராக இணைந்துள்ளார் தேஜஸ்வினி பண்டிட்.


மராத்திய நடிகை தேஜஸ்வினி பண்டிட்






மராத்திய மொழி படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகை தேஜஸ்வினி பண்டிட். திரைகளில் மட்டுமன்றி, தியேட்டர் ட்ராமாக்களிலும் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தவர் இவர், 2004ஆம் ஆண்டு, மஸா கர் ஸ்ரீமந்தச்சா என்ற தொடரில் நடித்தார்; சில தொடர்களில் வில்லி ரோல்களிலும் வந்துள்ளார். இவர், சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில், தான் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.


பணத்திற்கு பதிலாக..


புனேவில் உள்ள சின்ஹகாத் என்ற இடத்தில், 2009-2010 போன்ற ஆண்டுகளில் தங்கியிருந்தாராம் தேஜஸ்வினி. அப்போது இவரது ஓரிரண்டு படங்கள்தான் வெளியாகி இருந்ததாம். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுப்பதற்காக அந்த வீட்டின் உரிமையாளரின் அலுவலகத்திற்கு சென்றாராம் தேஜஸ்வினி. அப்போது, நடந்த அந்த சம்பவத்தை தேஜஸ்வினி நினைவு கூர்ந்திருக்கிறார். 


இது குறித்து அவர் பேசும் போது “நான் வாடகை கொடுப்பதற்காக அந்த அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அவர், அந்த விஷயத்தை என்னிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். உடனே நான் அங்கிருந்த மேஜையின் மேலிருந்த டம்ளர் தண்ணீரை எடுத்து அவரது முகத்தில் ஊற்றிவிட்டேன். பிறகு, நான் ‘இது போன்ற செயல்களை செய்வதற்காக நடிக்க வரவில்லை’ என்று கூறிவிட்டு விறு விறுவென அங்கிருந்து வந்து விட்டேன்” 




“அந்த சம்பவம் நடக்க காரணம்…” 


நடிகை தேஜஸ்வினி, வாடகை கொடுக்க போன இடத்தில் நடைப்பெற்ற அந்த சம்பவத்தை பல நாட்கள் கழித்து நினைவு கூர்ந்தார். வீட்டின் உரிமையாளர் இவரிடம் அப்படி நடந்து கொண்டதற்கு ஒரு காரணத்தையும் முன்வைத்துள்ளார் தேஜஸ்வினி. இவர், சினிமாவிற்கு வந்த புதிதில் கையில் பெரிதாக பணம் இல்லாததாலும், நடிகை என்பதாலும் அவர் இப்படி நடந்து கொண்டிருந்திருக்கலாம் என கூறுகிறார், தேஜஸ்வினி. மேலும், இச்சம்பவம் தனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.