பிரபல திரைப்பட நிறுவனமான ஏ.வி.எம் ஸ்டுடியோவின் பண்பாட்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வில் பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.


ஏ.வி.எம். ஸ்டூடியோ:


தமிழ் சினிமாவின் வரலாற்றின் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் ஏ.வி.எம் ஸ்டூடியோ பண்பாட்டு அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வில் உலக நாயகன் கமலஹாசன்,வைரமுத்து, நடிகர் சிவக்குமார் ஆகிய திரைப் பிரபலங்கள் மற்றும் டி.ஆர்.பாலு, பொன்முடி ஆகிய அமைச்சர்களும் ஏ.வி.எம் குடும்பத்தின் உறுப்பினர்களும்  கலந்துகொண்டார்கள்.


நூறாண்டுகால தமிழ் சினிமாவின் வளர்ச்சியில்  ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. தமிழ் தெலுங்கு, கன்னடம் ,மலையாளம்,ஹிந்தி  என அனைத்து  மொழிகளிலும் கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான ஒரு தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம் ஸ்டுடியோ தான். இந்த நிறுவனத்தின் இத்தனை ஆண்டுகால சாதனையை அடுத்து வரும் தலைமுறையினருக்கு  கொண்டு சேர்க்கவும் பல அரிதான பொருட்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் தற்போது ஏ.வி.எம் பண்பாட்டு அருங்காட்சியகம் தொடங்கப் பட்டுள்ளது.  


அருங்காட்சியகம்:


இந்த அருங்காட்சியகத்தில் எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களில் அணிந்த ஆடைகள், நடிகர் கமலஹாசன் அணிந்த ஆடைகள் முதலிய பொருட்கள்  பராமரிக்கப் பட்டுள்ளன. மேலும் பல்வேறு படங்களில் படதொகுப்பு ஒளிப்பதிவுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள்,கலைப்பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.இது மட்டுமில்லாமல் தமிழ் திரைப்படங்களில் வெவ்வேறு  நடிகர்களால் பயன்படுத்தப்பட்ட 40 கார்கள், 20 மோட்டார் பைக்கள் ஆகியவற்றை நீங்கே பார்க்கலாம்.ஏ.வி.எம் ஸ்டுடியோவை நிறுவிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்களில் சிலையும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் ஏ.வி.எம் ஸ்டுடியோவின் இத்தனை ஆண்டுகால சாதனையைப் போற்றும் வகையில் சிறிய கானொளி ஒன்றும் வெளியிடப் பட்டது.


மீண்டும் திரைப்பட தயாரிப்பு:


 ஏ.வி,எம் சரவணனின் மகனான எம்.எஸ்.குகன்  ஏ.வி.எம் நிறுவனம் இந்த பொருட்கள் அனைத்தையும் பராமரித்து வந்த அனுபங்களைப் பகிர்ந்துகொண்டார். 40 கார்களையும் 20 மோட்டார் பைக்களை ஒவ்வொன்றையும் நான் ஓட்டிப் பார்த்திருப்பதாக அவர் கூறினார். மேலும் ஏ.வி.எம் நிறுவனத்தில் திரைப்படங்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவங்களில் பராமரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விரைவில் மீண்டும் திரைப்படங்களை தயாரிப்பதற்கான திட்டம் இருப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.- திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளத தெரிவித்தார்.எம்.எஸ்.குகன். இன்றிலிருந்து இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் அனைவரும் சென்று வரலாம். இந்த அருங்காட்சியகத்திற்கு செல்ல நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 200 ரூபாயும் குழந்தைகளுக்கு 150 ரூபாயும் என தீர்மாணிக்கப் பட்டுள்ளது.