தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Continues below advertisement

இயக்குநர் இமயம் பாரதிராஜா

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. 1941ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பிறந்த அவர் தனது திரைப்பட வாழ்க்கையை கன்னட திரைப்பட இயக்குனர் புட்டண்ணா கனகலின் உதவியாளராகத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் 16 வயதினிலே படம்  இயக்குநராக அறிமுகமானார். 1977 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். அதுவரை ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை கிராமத்தின் எல்லை வரை அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. இதனாலேயே இவர் இயக்குநர் இமயம் என அழைக்கப்படுகிறார். 84 வயதான பாரதிராஜா இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்தவர். வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தொடர் சிகிச்சையிலும் இருந்து வந்தார். 

Continues below advertisement

இந்த நிலையில் தனது இல்லத்தில் இன்று அதிகாலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!

தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வந்த பாரதிராஜா

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த் காலக்கட்டம் தொடங்கி விஷால், தனுஷ் காலக்கட்டம் அவரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்தார். கடைசியாக 2020ம் ஆண்டு மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தையும் இயக்கியிருந்தார். கிராமத்து மண்வாசனையை திரையுலகிற்கு கொண்டு வந்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மகத்தான படைப்பாளர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு தான். 

பாரதிராஜா இயக்கிய படங்களில் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே ஆகியவை மிக மிக முக்கியமான படங்களாகும்.  அதேபோல் நடிகராக ஆய்த எழுத்து, ரெட்டைச்சுழி, பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம், கருமேகங்கள் கலைகின்றன ஆகியவை அவருக்குள் இருந்த மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது. 

இந்திய சினிமாவில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2004 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, அந்திமந்தாரை, கடல்பூக்கள், சீதா கொகா சியூகா (தெலுங்கு) ஆகிய அவரது படங்கள் தேசிய விருது பெற்றிருக்கிறது. வயதானாலும் சினிமாவுலகில் மிகவும் ஆக்டிவாக பாரதிராஜா செயல்பட்டு வந்தார். 

Also Read: CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!

நிலைகுலைய வைத்த மகனின் மரணம்

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதன்பின்னர் மிகப்பெரிய துயரத்தில் மூழ்கிய பாரதிராஜாவின் உடல்நிலையும் வெகுவாக பாதிக்கப்பட்டது.  மேலும் சில மாதங்களாவே பாரதிராஜா மரணம் குறித்த வதந்திகள் பரவி வந்தது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. அப்போதெல்லாம் அவர் சிகிச்சைப்பெறும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தனது 84வது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.