என் மூஞ்சில ஆசிட் அடிக்க வந்தாங்க...எம்.ஜி.ஆர் இல்லனா அவ்ளோதான்..நடிகை அம்பிகா பகிர்ந்த ஷாக்கிங் தகவல்
நடிகை அம்பிகா தான் ஒரு மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்தபோது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தனக்கு உதவி செய்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்

1980 களில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. தன்மீது எழுந்த கொலை குற்றச்சாட்டு காரணமாக தன்னை சிலர் கொலை செய்ய முயற்சித்ததாகவும் , அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி ராமச்சந்திரன் தான் தன்னை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றியதாக நடிகை அம்பிகா சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
நடிகை அம்பிகா 1979 ஆம் ஆண்டு தமிழில் சக்காளத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் , விஜயகாந்த் , சத்யராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். 1998 தொடங்கி இன்று வரை பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் , ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றி வருகிறார்.
அம்பிகா மீதான கொலை குற்றச்சாட்டு
நடிகை அம்பிகா அண்மையில் சித்ரா லட்சுமணனின் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பலர் அறியாத தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார். தன்னிடம் வேலைப் பார்த்த டிரைவரை அம்பிகா கொன்று தனது வீட்டு கிணற்றில் துண்டு துண்டாக வெட்டி வீசியதாக அவர் மீது கொலை குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை டிரைவர் சங்கத்தினர் சிலரும் பிரபல தெலுங்கு பட இயக்குநர் ஒருவரது மனைவியும் சேர்ந்து கொலை செய்ய பார்த்ததாகவும் அப்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் தன்னை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றியதாக அம்பிகா கூறியுள்ளார்
எம்.ஜி.ஆர் உடனான உறவு குறித்து பேசுகையில் " எம்.ஜி. ஆர் அவர்களை நான் முதல்முறை விமான பயணத்தின் போதுதான் சந்தித்து பேசினேன். அதன் பிறகு அவருடனும் அவரது மனைவி ஜானகி அம்மாவுடனும் எனக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. எனக்கு படப்பிடிப்பு இல்லையென்றால் உடனே அவர் வீட்டிற்கு சென்றுவிடுவேன் . அவருடன் ஒரே டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவேன். என் வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சனை வந்தபோது அவர்தான் என்னை காப்பாற்றினார். அவர் எனக்கு அந்த உதவி செய்யவில்லை என்றால் என்னை கொலை செய்திருப்பார்கள். 1987 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஜீவன ஜோதி படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருந்தது. அப்போது தான் என்னிடம் வேலைப்பார்த்த டிரைவரை கொன்று என் வீட்டு கிணற்றில் வீசியதாக தகவல்கள் பரவின. எனக்கு கொலை செய்யவே நேரமில்லை இதில் எங்கே துண்டு துண்டாக வெட்டி வீசுவது என்றுதான் எனக்கு தோன்றியது. ஆனால் அதையெல்லாம் நம்பி ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் டிரைவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பிரச்சனை பண்ணார்கள். நான் வெளியே வராவிட்டால் உள்ளே வந்து என்னை கொலை செய்துவிடுவோன் என்று மிரட்டினார்கள். என் முகத்தில் ஆசிட் வீசுவதாக சொன்னார்கள். அப்போதுதான் நான் எம்.ஜி. ஆருக்கு போன் செய்தேன். போலீஸ் பாதுகாப்புடன் அவர் என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். " என்று அம்பிகா பகிர்ந்துகொண்டார்.























