கதை குறித்தோ, கதாபாத்திரங்கள் குறித்தோ எந்தத் தகவலையும் வெளியிடாத நிலையில், அன்றாட பேச்சுவழக்கில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை திரைப்படத் தலைப்பாக மாற்றியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்கள் முதல் பொதுமக்களின் நேரடி உரையாடல்கள் வரை, 'ஒரண்ட' என்ற தலைப்பே தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.இந்த வித்தியாசமான விளம்பர உத்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று அனைத்து தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
ஒரு திரைப்படத்தின் முதல் பேசுபொருள் அதன் தலைப்பாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்ட இயக்குநர் சுசி கணேசன், மீண்டும் ஒருமுறை அதனை நிரூபித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 85% சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளும் விரைவில் நிறைவடையவுள்ளன.
அதன் பிறகு படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.தலைப்பின் மூலமே ஒரு திரைப்படத்தைப் பற்றிப் பேச வைப்பது சுசி கணேசனுக்கு புதிதல்ல. அவரது ஒவ்வொரு திரைப்படத் தலைப்பும் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டவை. படம் வெளியாகும் முன்பே, அதன் தலைப்பு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவது அவரது தனிச்சிறப்பு.
'விரும்புகிறேன்' திரைப்படத்தின் மூலம் பழமையான ஒரு தமிழ்ச்சொல்லையே மறக்க முடியாத திரைப்படத் தலைப்பாக மாற்றினார். அந்தப் படத்தின் விளம்பரத்திற்காக அண்ணா சாலையில் தீயணைப்பு குழாய்களால் பிணைக்கப்பட்ட நிலையில் நாயகன் - நாயகி இடம்பெற்ற பிரம்மாண்ட விளம்பரம் அன்றைய காலகட்டத்தில் பெரும் பேசுபொருளானது.
'5 ஸ்டார்' என்ற தலைப்பின் மூலம் ஒரு சாதாரண சொல்லை என்றும் மறக்க முடியாத நட்பின் அடையாளமாக மாற்றினார். 'திருட்டுப் பயலே' திரைப்படத்தின் தலைப்பே அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று இயக்குநர் கே. பாக்யராஜ் பொதுவெளியில் பாராட்டியிருந்தார்.
'கந்தசாமி' திரைப்படத்தின் மூலம் ஒரு பொதுஜன பெயரையே பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோவின் அடையாளமாக உயர்த்திய சுசி கணேசன், அந்தப் படத்தின் துவக்க விழாவிலேயே கையடக்க டிஜிட்டல் திரையில் டிரெயிலரை வெளியிட்டு, அக்காலத்திலேயே புதுமையான விளம்பர உத்தியை அறிமுகப்படுத்தியிருந்தார்.
திரைப்படத்தின் தலைப்பு என்பது வெறும் பெயர் அல்ல; ரசிகர்களுக்கும் கதைக்கும் இடையிலான முதல் உணர்வுப்பூர்வமான இணைப்பு என்பதைக் காலம் தோறும் நிரூபித்து வருபவர் சுசி கணேசன். இப்போது, 'ஒரண்ட' மூலமும் அதையே மீண்டும் ஒருமுறை நிகழ்த்தியிருக்கிறார்.
முதல் பார்வைக்கு முன்பே...டீசருக்கு முன்பே...டிரெயிலருக்கு முன்பே... 'ஒரண்ட' இன்று தமிழகம் முழுவதும் பேசப்படும் பெயராக மாறியுள்ளது.
