ஜெய் பீம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன் ‘. இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்க , சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் படத்தின் கதை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தின் தாக்கம் சமுதாயத்தில் பல மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட அந்த படத்தின் வெற்றி , சூர்யா படங்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 







அந்த வகையில் பாண்டிராஜன் , சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அந்த சம்பவத்தைதான் இயக்குநர் பாண்டிராஜன் கையில் எடுத்திருக்கிறாராம். சமுதாய பிரச்சனைகளை துணிச்சலாக பேசும் சூர்யா மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையை கையில் எடுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கும் கிட்டத்தட்ட ஒற்றுமை இருப்பது போலத்தான் உள்ளது.







ஃபஸ்ட் லுக் போஸ்டரில் கையில் இரத்தக்கறையுடன் கூடிய வாளுடன் , மிகுந்த கோபத்துடன் அமர்ந்திருப்பார் சூர்யா. அருகில் சிலர் இறந்து கிடப்பது போன்று இருக்கும். அதன் பிறகு வெளியான டீஸர் ஒன்றில் ஒரு பழைய கட்டிடம் ஒன்றில் ஏராளமான இளைஞர்களை கொன்று குவிக்கும் சூர்யா , அதில் ஒருவனின் காலை பிடித்து இழுத்து செல்வார். இதனை பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி பார்க்க முடிகிறது. முன்னதாக படத்தில் சூர்யா சமூக போராளியாக நடித்து வருகிறார், பெண்களுக்காக போராடும் கதைக்களம் கொண்ட திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற செய்திகள் வெளியான நிலையில் , தற்போது வெளியாகியிருக்கும் செய்தியும் அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.







எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.  சத்யராஜ், சரண்யா பொன் வண்ணன், சூரி மற்றும் சரண் ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சூர்யாவிற்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்ததால் படக்குழுவினருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்களை சூர்யா பரிசளித்ததாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.