Suriya Daughter Diya: நடிகர் சூர்யாவின் மகள் உயர்கல்விக்காக நியூயார்க் சென்றுள்ளதாக விருமன் பட இசை வெளியீடு நிகழச்சியில் சூர்யா தெரிவித்துள்ளார். 


நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யாவின் 2டி என்டெர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள படம் விருமன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று (03/08/2022) மிகவும் ஆரவாரத்தோடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, ”எனக்கு தேசிய விருது வழங்கப்பட்ட போது அதை நான் உணரவே சில மணிநேரங்கள் எடுத்துக் கொண்டது. தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது நான் எனது மகளுடன், அவரின் உயர்கல்விக்காக நியூயார்க்கில் இருந்தேன். ஒரு நாற்பது நாட்கள் நான் நியூயார்க்கில் இருந்தேன். என்னைவிட எனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை உங்களுக்கு வழங்கப்பட்ட விருதாக கருதி மிகவும் கொண்டாடியது நீங்கள் தான்’’ என பேசினார். சூர்யாவின் பேச்சில் இருந்து அவரது மகள் தியா நியூயார்க்கில் படிக்கவிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. 


முத்தையா இயக்கி, நடிகர் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதி ராஜா, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, விருமன் படத்தின் நடிகர் கார்த்தி நடிகை அதிதி, நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவில் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களும் கலந்து கொண்டனர். 


படத்தின் முதல் சிங்கிள் டிராக் ’கஞ்சாபூவு கண்ணால’ பாடல்  ஏற்கனவே யூடூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் நடந்து வருகிறது.


தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்’.


முன்னதாக, 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண