தமிழக அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

மாநில திரைப்பட விருதுகள் விழா

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் வெளியாகும் படைப்புகளுக்கு துறை சார்ந்த விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியில் பல்வேறு காரணங்களால் விருது வழங்கப்படாமல் இருந்தது. இதனால் நடப்பாண்டு 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளுக்கும் சேர்த்து சினிமா விருதுகள் வழங்கப்பட்டது. அதேபோல் சின்னத்திரையில் 2014 ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது பிப்ரவரி 13ம் தேதியான நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,   அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

விருது பெற்ற பிரபலங்கள்

இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களான சூர்யா, விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு, பிரசன்னா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தனுஷ், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், ஜோதிகா, அபர்ணா பாலமுரளி, மஞ்சு வாரியார், லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி, கார்த்தி, ஆர்யா, மாரி செல்வராஜ், சுதா கொங்காரா, த.செ.ஞானவேல், குரு சோமசுந்தரம், சந்தோஷ் ஸ்ரீராம், விஷ்ணு விஷால்பசுபதி, அப்புக்குட்டி, அதிதி பாலன், ஆண்ட்ரியா ஜெரோமையா, ஐஸ்வர்யா ராஜேஷ், இந்துஜா, அபர்நதி, ஷாம் சிஎஸ், ஹிப் ஹாப் தமிழா, தமன், ஜி.வி.பிரகாஷ்குமார் என ஏகப்பட்ட பேர் விருது பெற்றனர். 

மாற்றிக் கொடுக்கப்பட்ட விருது

இந்த நிலையில் 2020ம் ஆண்டு வெளியான சூரரைப்போற்று படத்துக்காக நடிகர் சூர்யா விருது பெற்றார். அவருக்கான விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேடையில் சால்வை, மெடல், விருது, விருதுக்கான சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. அப்போது சூர்யாவுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் அவருக்கான பெயருக்கு பதில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இடம் பெற்றிருந்தது. 

இதனை விருது பெறும்போது சூர்யா கவனித்து விட்டார். நேராக கீழே இறங்கி வந்த அவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் சென்று உங்களுக்கானதை நான் வாங்கிட்டு வந்து விட்டேன் என்ற ரீதியில் சான்றிதழை சுட்டிக்காட்டி பேசியதாக சொல்லப்படுகிறது. இதனைக் கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்லாமல் சுற்றியிருந்த பிரபலங்களும் சிரித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக நிகழ்ச்சிகளில் கடைசி நேர குழப்பத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவதுண்டு. அதுவும் 7 ஆண்டுகளுக்கும் சேர்த்து நூற்றுக்கணக்கான கலைஞர்களை கௌரவிக்க வேண்டிய நிகழ்வில் நடந்த இந்த சம்பவம் பெரிதுப்படுத்தப்படவில்லை என்றாலும் சூர்யாவின் அந்த க்யூட் வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.