தற்கொலை செய்துக்கொண்ட பிரபல நடிகை பிரதியுஷா மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சித்தார்த் ரெட்டியை சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரணடைய அவருக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழில் மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகை பிரதியுஷா. 1998 ஆம் ஆண்டு ராயுடு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவர் தனது 20 வயதில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார். பிரதியுஷாவும் அவரது நண்பர் சித்தார்த் ரெட்டியும் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பிரதியுஷா இறக்கவே, சித்தார்த் குணமடைந்தார். அவர் மார்ச் மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் பிரதியுஷா கும்பத்தினருக்கு சித்தார்த் ரெட்டி மீது பெரும் சந்தேகம் ஏற்பட்டது.
பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல, கூட்டு பாலியல் வன்கொடுமை என்றும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவர் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தினார்.
அவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் 24 ஆண்டுகளாகியும் அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின் பிரதியுஷாவின் தாயார் இந்த வழக்கில் வென்றுள்ளார். இந்த வழக்கை முதலில் விசாரித்த சிபிஐ, சித்தார்த்த ரெட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் 2004 ஆம் ஆண்டில் முதன்மை அமர்வு நீதிமன்றம் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இது 2011ம் ஆண்டில் உயர்நீதிமன்றம் சென்று 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சித்தார்த் ரெட்டி மற்றும் நடிகை பிரதியுஷாவின் தாயார் சரோஜினி தேவி இருவரும் 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து இறுதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதியுஷா மரண வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி சித்தார்த் ரெட்டி 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அபராதத்தை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சித்தார்த் ரெட்டி சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என பிரதியுஷாவின் தரப்பு தீர்ப்பை கேட்டு கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சித்தார்த் ரெட்டிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டு சிறையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.