தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். திமுகவின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய மு.க.ஸ்டாலின் மகனான  உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மையான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். 


இதனையடுத்து அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று 1 வருடம் கழிந்த பின்பும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் அண்மையில் அவருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


 






இந்நிகழ்வில் ‘உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என சொல்லும் போது அரங்கத்தில் ஆரவாரம் எழுந்தது. பின்னர் ஆளுநர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பூங்கொத்து வாழ்த்துப் பெற்ற அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.


இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகரும் மக்கள் நீதி கட்சி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 






அந்தப்பதிவில், “வாழ்த்துகிறேன் தம்பி அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.” என்று பதிவிட்டு இருக்கிறார்.