தமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகர் டெல்லி கணேஷ். விமான படையில் பணிபுரிந்த டெல்லி கணேஷ் சினிமா மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக நடிகராக மாறினார். பல படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷிற்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்தான் மைக்கல் மதன காமராஜர். அந்த படத்தில் பாலக்காடு மணி ஐயராக நடித்து அசத்தியிருப்பார். மலையாளம் கலந்த பாலக்காடு தமிழில் பேசும் டெல்லி கணேஷின் அந்த கதாபாத்திரத்திற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய தகவல்களை மேடை ஒன்றில் பகிர்ந்துள்ளார் டெல்லி கணேஷ் .





அதில்"என் மனைவி திருவனந்தபுரம் , அவர் மலையாளம் கலந்த தமிழ்லதான் இன்னைக்கும் பேசுவா. நான் ஏர் ஃபோர்ஸ்ல இருந்தேன் . எனக்கு பொண்ணு கொடுக்கவே யோசிச்சாங்க. குறிப்பா என் இளைய மாமனாருக்கு விருப்பமில்லை. ஆனாலும் நானும் என் மனைவியும் விருப்பப்பட்டு திருமணம் செய்துக்கொண்டோம். ஒருநாள் என் இளைய மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு இன்னும் என் மேல் கடுப்பு இருக்கு. வீட்டில் அவருக்காக எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தேன்.அப்போது கேஸ் வைத்திருக்கும் பாத்திரத்தில் சின்னதா கீரல் இருந்தது. அதை கண்டு அவர் “ கேட்டியா? கீரிருக்கி கேட்டியா..தாழ விழும்.. வெடிக்கும்” என கூறினார். அத  பிறகு என் மனைவி வெளியே சென்றால் பிளார்ட்ஃபாமில் நடக்காதே , ஓரமாக போ ..பல்லவன் வந்து இடிக்கும் என்பார், அதே போல பேருந்தில் பயணம் செய்யும் போது ஜாக்கிரதையா இரு , இல்லைனா கத்தி வச்சு கிழிச்சுருவானு சொல்லுவார். இப்படியாக அவர் பேசுவது எல்லாம் வெடிக்கும் , இடிக்கும் , கிழிக்கும் என்பதுதான்.


அதாவது அவர் என்ன குறை சொல்லலாம் என்றேதான் தேடுவார்.  இதைத்தான் ஸ்ரீவித்யாக்கிட்ட ஒருமுறை அவரை இமிடேட்  செய்து காட்டினேன். அதன் பிறகு மைக்கேல் மதன காமராஜன் திரைப்பட சமயத்தில் ஸ்ரீவித்யா, கமல் , நகேஷ் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஸ்ரீவித்யா கமலிடம் சொன்னார், கமல் பாருங்க..இவர் மாமனார் போல எப்படி செய்துக்காட்டுவார் என அப்படினு நானும் அதைப்போல்  செய்துக்காட்டினேன். அதன் மூலமாக உருவானதுதான் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் உருவான பாலக்காடு மணி ஐயர் கதாபாத்திரம்.




பிற்காலத்துல என் மாமனார் என்னிடம் உனக்கு நல்ல பெயர் அந்த படத்தாலனு சொன்னார். நான் அப்போது சொன்னேன் , அது உங்களாலதான். நீங்கதான் அந்த கதாபாத்திரத்திற்கு முன்னோடி என்று. அதை கேட்டு அவர் சிரித்தார்.அதன் பிறகு பிரபலமானதால் என் மீது இருந்த பகை எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. காமெடி என்பது ஒரு தொடர்சியாக வருவது அது கடவுள் கொடுத்த வரம். கவுண்டமணி அப்படி அடுத்தடுத்து நகைச்சுவை செய்வதாலேத்தான், அவரை கவுண்டர் மணி என அழைத்தார்கள் . அதே போல நாகேஷும் கவுண்டர் காமெடியில் வல்லவர் ”என தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் டெல்லி கணேஷ்.