இன்றைய நாள் எவ்வளவு முக்கியமான நாள் என்பதை கூறுவதற்கு முன், இந்த தகவல்களை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன். 1940களில் தமிழ் சினிமா இருந்த நிலை யாருக்கு தெரியும்? ஒரு ஹீரோ என்றால், அவர் சினிமாவில் வரும் அனைத்தையும் அவரே செய்பவராக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு படத்தில் வரும் பாடலை கூட, அந்த ஹீரோ தான் பாட வேண்டும். அப்படி தான் கட்டமைக்கப்பட்டிருந்தது தமிழ் சினிமா. இதனால், நடிப்பு , குரல் வளம் உள்ளிட்ட திறமை இருப்பவர்கள் மட்டுமே சினிமாவில் நடிக்க முடிந்தது. 


அந்த காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார்களாக தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, ஹாென்னப்பா பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் போன்றவர்கள் தான் சினிமாவில் மிலிர்ந்து கொண்டிருந்தனர். கதாநாயகிகளுக்கும் இதே வரமுறை தான். அதனால், எம்.ஜி.ஆர்., போன்ற நடிகர்கள் 10 ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு கிடைக்காமல் காத்துக் கொண்டிருந்தனர். 


ஜூபிடர் என்கிற தயாரிப்பு நிறுவனம் தான் அப்போது மிகப்பெரிய மக்கள் அபிமானம் பெற்ற நிறுவனம். அவர்களின் படங்கள் மீது மக்களுக்கு பெரிய ஈர்ப்பு இருந்தது. அவர்களின் படத்தில் நடித்தால் தனக்கு புதிய பாதை திறக்கும் என்று தீர்க்கமாக நம்பினார் எம்.ஜி.ஆர். ஆனால் சினிமா வாய்ப்பு அவ்வளவு எளிதல்லவே! எம்.ஜி.ஆர்.,யின் அண்ணன் சக்கரபாணி, ஜூபிடர் நிறுவனம் தயாரித்த மஹாமாயா என்கிற படத்தில் வில்லனாக நடித்தார். அண்ணனை பார்க்கும் சாக்கில் அங்கு செல்லும் எம்.ஜி.ஆர், தயாரிப்பாளர் பார்வையில் படும் படி தினமும் அங்கு நின்றுள்ளார். ஒரு நாள் அவரை கவனித்த ஜூபிடர் நிறுவன உரிமையாளர்களின் ஒருவரான எம்.சோமசுந்தரம், எம்.ஜி.ஆர்., பற்றி விசாரிக்க, சக்கரபாணியின் சகோதரர் என்று அவரிடம் அறிமுகமாகியுள்ளார். அத்தோடு, தனது நடிப்பு ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார் எம்.ஜி.ஆர். 



அதை கேட்ட சோமு, அவருக்கு வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். ஜூபிடர் நிறுவனத்தின் அடுத்தபடமான ‛என் மகன்’ படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார் எம்.ஜி.ஆர்., ஆனால், அந்த படத்தில்அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக தியாகராஜ பாகவதருடன் இணைந்து அசோக்குமார் என்ற படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்தார் எம்.ஜி.ஆர். அவரின் நடிப்பை கண்டு ‛இந்த பையன் நல்லா வருவான்...’ என்று தியாகராஜ பாகவதர் பாராட்டியிருக்கிறார். ஆனால், வாய்ப்புகளுக்காக காத்திருந்தார் எம்.ஜி.ஆர்.,


1940களின் இடையே சினிமாவில் பின்னணி பாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்காக பலரும் வாய்ப்புகளோடு வரத்தொடங்கினர். அந்த காலகட்டத்தில் தான் எம்.ஜி.ஆர்.,க்கு ஸ்ரீ முருகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதுவும் ஒரு பெரிய நிகழ்வின் காரணமாக. 1945ல் தான் ஸ்ரீ முருகன் படத்தை தயாரிக்க ஜூபிடர் நிறுவனம் முடிவு செய்தது. அப்போது கொடி கட்டி பறந்து கொண்டிருந்த எம்.கே.டி.பாகவதரை தான் ஹீரோவாக புக் செய்தது ஜூபிடர். அவர் நடித்த ஹரிதாஸ் என்கிற படம், 3 தீபாவளிகளை கடந்து ஆரவாரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. 


புகழின் உச்சியில் நின்று கொண்டிருந்த எம்.கே.டி.பாகவதர், ஸ்ரீ முருகன் படத்தில் நடிக்க நிறைய நிபந்தனைகளை விதிக்கத் தொடங்கினார். வைஜெயந்தி மாலாவின் தாயான வசுந்தரா தேவியை வள்ளியாகவும், டி.ஆர்.ராஜகுமாரியை தெய்வானையாகவும் பணியமர்த்த உத்தரவிட்டார் எம்.கே.டி.பாகவதர். ஆனால், தெய்வானையாக நடிக்க மறுத்துவிட்டார் டி.ஆர்.ராஜகுமாரி. இது ஒருபுறம் இருக்க எம்.கே.டி.பாகவதர் இன்னொரு குண்டை போட, தலைசுற்றி போனது தயாரிப்பாளர் தரப்பு.


‛குறைந்த படங்களில் நடித்து அதீத புகழை பெற்ற தனக்கு, கைவசம் 10 படங்கள் இருப்பதாகவும் , இந்த படத்து படங்களில் நடிக்க தனக்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்’ என்று கூற, அவர் கூறும் பட்டியலில் கடைசி படமாக ஸ்ரீமுருகன் இருந்தது. ‛என்ன... படம் எடுக்க இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா’ என சங்கடம் அடைந்தனர் ஜூபிடர் தயாரிப்பாளர்கள். ஆனால் மறுநாளே விதி வேறு மாதிரி விளையாடியது. 



சினிமா வதந்திகளை எழுதி வந்த லட்சுமிகாந்தன் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக என்.எஸ்.கிருஷ்ணன், பக்ஷி ராஜா ஸ்டூடியோ ஸ்ரீராமுலு நாயுடு, தியாகராஜ பாகவதர் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால், படங்களுக்கு முன்பணம் பெற்ற அவர்கள், அதை தயாரிப்பு நிறுவனங்களிடம் கொடுத்து விட்டு சிறை சென்றனர். இதனால் ஸ்ரீ முருகன் படத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 


எம்.கே.டி.,க்கு பதிலாக ஹாென்னப்பா பாகவதர் கதாநாயகனாக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் தான், முக்கிய கதாபாத்திரமான சிவனுக்கு யாரை போடலாம் என தயாரிப்பாளர்களுக்கு சிந்தனை வந்த போது முன்பு தான் பார்த்த சக்கரபாணியின் தம்பி எம்.ஜி.ஆர்.,யை ஏன் போடக்கூடாது என அவருக்கு தோன்றியது. அவ்வளவு தான், ஸ்ரீ முருகனின் சிவன் வேடத்திற்கு தேர்வானார் எம்.ஜி.இராமச்சந்திரன். 


தெலுங்கு நடிகை மாலதி என்பவரை பார்வதியாக எம்.ஜி.ஆர்.,க்கு ஜோடியாக்கினர். அந்த படத்தில் வரும் சிவபெருமானின் ருத்ரதாண்டவத்திற்காக 6 மாதங்கள் நடன பயிற்சி எடுத்துள்ளார் எம்.ஜி.ஆர். குமார ஆசான் என்பவர் தான் எம்.ஜி.ஆர்.,க்கு நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தந்துள்ளார். ஜூபிடர் நிறுவனத்திற்கு ஏற்ற நடிகராக தன்னை தயார்படுத்திக் கொண்டு அந்த படத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர். 


எம்.ஜி.ஆர்.,யின் பணி நேர்மையை கண்டு வியந்த ஜூபிடர் நிறுவனம், ஸ்ரீமுருகன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதே, வித்யாபதி , ராஜகுமாரி என இரு படங்களை தயாரிக்க முடிவு செய்தது. இதில் ராஜகுமாரியில் எம்.ஜி.ஆர்.,யை கதாநாயகனாகக்கவும் முடிவு செய்தது. அந்த தகவல் அப்போது படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆர்.,யிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு காரணம், இதற்கு முன்பாக சில படங்கள், அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு வந்து ,அதை நிறைவேறாமல் போன விரக்தியில் இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், ராஜகுமாரியில் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு கைகூடி வந்தது. இதற்கிடையில் தான், 1964 அக்டோபர் 27 ல், ஸ்ரீ முருகன் திரைப்படம் வெளியானது. 


படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், எம்.ஜி.ஆர்., ஆடிய ருத்ரதாண்டவம் பெரிதாக பேசப்பட்டது. கொண்டாடப்பட்டது. அதனாலேயே அவருக்கான வாய்ப்புகள் வேகமாக திறக்கத் தொடங்கின. சினிமாவில் புரட்சித் தலைவர், அரசியலில் மக்கள் தலைவர், ஆட்சியில் முதல்வர் என மூன்று வெற்றியை கண்ட ஒரு நாயகனை, அறிமுகம் செய்த ஸ்ரீ முருகன் படம் வெளியான நாள் இன்று. அன்றைய தினம் தீபாவளி திருநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.