நம்மை ரசிக்கும் மக்களிடம் விளம்பரத்தை திணிக்கக்கூடாது என பிக்பாஸ் போட்டியாளரும், சமூக வலைத்தள பிரபலமான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜனநாயகன் படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அந்த படம் ரிலீசாவதில் நடக்கும் உள் அரசியல் என்னவென்று தெரியவில்லை. அதனால் படம் தாமதமாகிறது. ஜனநாயகன் படத்துக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கு. அப்படம் ரிலீசாகவில்லை என்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். பொங்கலுக்கு வரும் என சொன்னார்கள். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்த வீட்டுக்குள் இருக்கும்போது உள்ளே இருந்தவர்கள் ஜனநாயகன் படம் வந்துடுச்சா என்று தான் கேட்டார்கள். 105 நாட்கள் அந்த வீட்டில் இருந்த ஒருவர் 106வது நாளில் நான் இங்கே இருந்தது போதும். எனக்கு ஜனநாயகன் படம் தான் முக்கியம் என சொன்னதை கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. 

நான் இளைஞர்களுக்கு சொல்வது ஒன்று தான். அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் யாராக இருந்தாலும் நண்பர்களாக இருங்கள். அவர்கள் இருவரின் ரசிகர்களும் படிங்க, நல்ல வேலை பாருங்க என்று தான் தொடர்ச்சியாக அஜித், விஜய் வலியுறுத்தி வருகிறார். 2010ல் நான் 10ம் வகுப்பு படித்தேன். அந்த காலக்கட்டத்தில் மதுரையில் அஜித்குமார், விஜய் ரசிகர்களிடையே பயங்கர மோதல் இருக்கும். அது 80 சதவிகிதம் தற்போது குறைந்து விட்டது. தயவு செய்து தல பேன்ஸ், தளபதி பேன்ஸ் என அடித்துக் கொள்ளாதீர்கள். 

Continues below advertisement

ஒரு படத்தை வெற்றி பெற வைப்பதே மதுரை மாவட்டம் தான். அது தமிழ் சினிமாவின் கோட்டை. மதுரையில் ஒரு படம் ஜெயித்தால் அது மொத்த தமிழ்நாட்டிலும் ஜெயிக்கும்” என திவாகர் கூறினர். 

தொடர்ந்து அஜித் விளம்பரத்தில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அஜித்குமார் முதலில் சின்ன சின்ன விளம்பரத்தில் நடித்து வந்தார். அதன்பிறகு நிறுத்தி விட்டார். மீண்டும் விளம்பரத்தில் நடித்துள்ளது என்ன மாதிரி நோக்கம் என தெரியவில்லை. அஜித் ஏற்கனவே நிறைய சம்பாதித்து விட்டார். பார்க்காதெல்லாம் பார்த்து விட்டார். அவருக்கு பணம் சம்பாதிப்பது நோக்கம் கிடையாது.

விளம்பரத்தில் நடிக்க சில காரணம் இருக்கலாம். அஜித்தை விலைக்கு வாங்கவே முடியாது. அவரை என்னை விட்டு விடுங்கள் என்றால் கூட தயாரிப்பாளர்கள் விட மாட்டேங்குகிறார்கள். ரசிகர்களும் படம் கொடுக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள். அஜித் படம் குறைவாக கொடுக்கிறார் என கூறுகிறார்கள். 

அஜித் எப்போது படம் நடித்தாலும் பார்ப்பார்கள். அவர் நட்புக்காக விளம்பரத்தில் நடித்திருக்கலாம். ஆனால் நான் எந்தவொரு காரணத்திற்காகவும் பணம் கொடுத்தால் ஒரு பொருளை விளம்பரம் செய்ய மாட்டேன். என்னுடைய  சமூக வலைத்தளப் பக்கத்தைப் பார்த்தால் தெரியும். காரணம் நம்மை ரசிக்கும் மக்களிடத்தில் விளம்பரத்தை திணிக்கக்கூடாது. நம்மை ரசிக்கும் மக்கள் திறமையை தான் பார்க்கிறார்கள். அதற்காக இந்த பொருளை வாங்குங்கள் என சொல்லக்கூடாது. அஜித் செய்வதை நான் தப்பு சொல்லவில்லை. ஆனால் நட்புக்காக சில வேண்டிய சூழல் ஏற்படலாம்” என தெரிவித்துள்ளார்.