மகாபாரத நடிகர் நிதிஷ் பரத்வாஜ் மீது அவரின் மனைவி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 


சினிமாவில் பிரபலங்கள் காதலிப்பது, திருமணம் செய்து கொள்வதும், சில ஆண்டுகளில் பிரிவதும் சகஜமாக நடக்கும் ஒன்றாகும். அப்படி அவர்கள் பிரியும் நிலையில் ஒருவர் மீது ஒருவர் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுவது வழக்கமாக நடக்கும் ஒன்றாகும். அப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. 1988 ஆம் ஆண்டு ஒளிபரப்பான  புகழ்பெற்ற ஆன்மீக தொடரான மகாபாரதத்தில் கிருஷ்ணராக நடித்தவர் நிதிஷ் பரத்வாஜ்.


அந்த கேரக்டருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஷ்ணு புராணம், மொஹெஞ்சதாரோ, கேதார்நாத் மற்றும் சமந்தர் சீசன்ஸ் 1 மற்றும் 2 போன்ற பல பிரபலமான நிகழ்ச்சிகள், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  நிதிஷ் பரத்வாஜ்  இந்த மாத தொடக்கத்தில் மனைவி ஸ்மிதா கேட் மீது, துன்புறுத்தல், தகாத நடத்தை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து போலீசில் புகார் அளித்தார். இது பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனிடையே நிதிஷ்  மனைவி ஸ்மிதா தன்னுடைய கணவர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், “நிதிஷ் தன்னை வேலையை விட்டு விடுமாறு கூறினார். நான் மறுத்த நிலையில் தனக்கு பணம் தர வேண்டும் என வற்புறுத்தினார். இதனால் தான் விவாகரத்து கேட்டார். நான் அதற்கு தயாரான நிலையில் தானும் சம்மதிக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும் என சொன்னார். ஆனால் பணம் கொடுக்க நான் முன்வரவில்லை. இதனாலேயே தன்னை பாதிக்கப்பட்டவராக காட்டி கொள்ள தொடங்கியுள்ளார். இந்த புகார் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். 


கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தன்னுடைய மகள்களை சந்திக்க ஸ்வேதா அனுமதிக்கவில்லை என நிதிஷ் பரத்வாஜ் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. வேண்டும் என்றே பிப்ரவரி 13 ஆம் தேதி மகள்களை சந்திக்கும் நிகழ்வை நிதிஷ் தவிர்த்தார். அதேசமயம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ளாமல் செய்தியாளர் சந்திப்பை வைத்து என் மீது பல குற்றங்களை சாட்டினார். இதனைத் தொடர்ந்து குடும்ப நண்பர்கள் மற்றும் காவல்துறை அதிகாரி முன்னிலையில் நிதிஷ் என்னுடைய வீட்டில் மகள்களை சந்தித்தார். இந்த நிகழ்வின் முவில் என் மகள்கள் கதறி அழுததை மறுக்க முடியாது. 


நிதிஷ் இதுவரை தன் மகள்களுக்கு பிறந்ததிலிருந்து நிதியுதவியே செய்யவில்லை. பள்ளிக் கட்டணமோ, அவர்களின் பராமரிப்பு செலவுக்கோ எதுவும் வழங்கவில்லை” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ் பரத்வாஜின் மனைவி ஸ்வேதா மத்திய பிரதேசத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.