தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற ஒரு பிரதிபலிப்பை கொடுப்பதே ஏராளமான ரசிகர்களை கவர முக்கியமான காரணம். 



 


வெள்ளித்திரையில் எஸ்கே :


காமெடி ட்ராக்கில் கலக்கும் அசாத்தியமான திறமை படைத்த சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் போட்டியாளராக திரையில் முதலில் தோன்றினார். பின்னர் தன்னுடைய பேச்சு திறமையால் தொகுப்பாளராக முன்னேறி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் 'அது இது எது' நிகழ்ச்சி மிக பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்தது.


அதன் மூலம் வெள்ளித்திரை வாய்ப்பு பெற்று அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இன்று வெற்றி நாயகனாக தமிழ் சினிமாவை கலக்கி  வருகிறார். 


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் பெயர் சூட்டல் விழா சில தினங்களுக்கு முன்னர் தான் நடைபெற்றது.


தனிப்பட்ட வாழ்க்கையில் சிவகார்த்திகேயன் எந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்கிறாரோ அதே போல அவரின் திரை பயணத்தையும்  மிகவும் வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியான ஒரு நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.


அமரன் ரிலீஸ் :



காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் படங்களில் பின்னி பெடலெடுத்த சிவகார்த்திகேயன் தற்போது ஆக்ஷன் படங்களிலும் களம் இறங்கி கலக்கி வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் 'அமரன்' படத்தில் நடித்துள்ளார்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. விரைவில் இப்படம் வெளியாக தயாராக உள்ளது.  



வரவிருக்கும் படங்கள் :


அதன் தொடர்ச்சியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். ரொமான்ஸ் ஜானரில் உருவாகி வரும் அப்படத்தில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் சிவகார்த்திகேயனை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியோடு மீண்டும் கூட்டணி சேர உள்ளார். அதே நேரம் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்த 'புறநானூறு' திரைப்படம் கைவிடப்பட்டதால் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அப்படத்தின் பணிகளை துவங்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவிட்டன என்றும் விரைவில் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் ஹெச். வினோத் படத்திலும் சிவகார்த்திகேயன் இணைய உள்ளார் என கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக ஈடுபட உள்ளார். பொறுமையாகவும் நிலையாகவும் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை வலுவாக்கி வருகிறார்.