சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். பேட்டி ஒன்றில் இந்த படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் எஸ்.கே
கடந்த சில ஆண்டுகளில் கோலிவுட்டின் முழு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அமரன் , மதராஸி , தற்போது பராசக்தி என அடுத்தடுத்த படங்களில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக தன்னை முன் நிறுத்தியுள்ளார். அண்மையில் திரையரங்கில் வெளியான பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு படம் பற்றி சிவகார்த்திகேயன்
வெங்கட் பிரபு இயக்கிய தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் சிறிய கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த கூட்டணியில் அடுத்து ஒரு சிறப்பான பொழுதுபோக்கு திரைப்படம் உருவாக இருக்கிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இப்படத்தைப் பற்றிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்
பேட்டி ஒன்றில் பேசிய அவர் "சமீபத்தில் நான் ரொம்ப சீரியஸான படங்களில் நடித்துவிட்டேன். அதனால் அடுத்து நான் நடிக்கும் படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதில் நான் ரொம்ப கவனமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். சென்னை 28 , கோவா என சூப்பரான நகைச்சுவை திரைப்படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கப்போகும் படமும் பலரும் பார்த்து ரசித்த சிவகார்த்திகேயனின் நகைச்சுவை அம்சத்தை அதிகம் வெளிக்காட்டும் விதமாக இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.