சினிமாவில் தற்போது வரும் பாடல்கள் எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என நேர்காணல் ஒன்றில் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பதிலளித்துள்ளது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பாசமலர் படத்தில் இடம் பெற்ற ‘வாராயோ தோழி வாராயோ’பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் எல்.ஆர்.ஈஸ்வரி. தனது காந்த குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட அவர் எம்ஜிஆர்,சிவாஜி தொடங்கி சிம்பு, அருண் விஜய், ஆர்.ஜே.பாலாஜி படம் வரை பாடியுள்ளார். சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்தி பாடல்களும் யாராலும் மறக்க முடியாது. 


தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எல்.ஆர்.ஈஸ்வரி தமிழ் சினிமாவின் தவிர்க்க மற்றும் மறக்க முடியாத பாடகியாக இன்றளவும் போற்றப்படுகிறார். இதனிடையே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், தற்போது வெளியாகும் பாடல்களை எல்லாம் தான் தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார். 


அந்த நேர்காணலில், சமீபமாக நான் புஷ்பா படத்தில் வரும் உ சொல்றீயா மாமா பாடலை கேட்டேன். அதெல்லாம் ஒரு பாட்டா?.. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரியாக இருந்தது. அந்த பாடல் என்னிடம் வந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். புதிதாக வரும் பாடகர்களுக்கு என்ன தெரியும்? இசை அமைப்பாளர்கள் தான் அவர்களை கச்சிதமாக பாட வைக்க வேண்டும். 


இன்றளவும் பழைய பாடல்கள் கொண்டாடப்பட காரணம் அது உருவான விதம் தான் எனவும் நேர்காணலில் எல்.ஆர்.ஈஸ்வரி கூறியுள்ளார். அல்லு அர்ஜூன் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நல்ல ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்த நிலையில், சமந்தா ஒரு பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இப்படத்திற்கு இசையமைத்த நிலையில், தமிழ் மொழியில் உ சொல்றீயா பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியிருந்தார், இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.