தமிழ் சினிமாவுல 90 - 20 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். சிம்ரனிற்கு மோனல் , ஜோதி  என்ற  இரண்டு தங்கைகள் உண்டு. இதில் மோனலும் அக்காவை போல நடிப்பு துறையை தேர்வு செய்தார். வணிகவியலில் பட்டம் பெற்ற மோனலுக்கு சிம்ரன், தான் பீக்கில் இருந்த சமயத்தில் சினிமா வாய்ப்புகளை பெற்றுத்தந்தார்.


முதலில் கன்னட படத்தில் அறிமுகமான மோனலுக்கு , தமிழில் முதல் படமாக அமைந்தது பார்வை ஒன்றே போதுமே. இதில் மறைந்த நடிகர் குணாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பார்வை ஒன்றே போதுமே திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே விஜய் நடிப்பில்  பத்ரி படம் வெளியானது. இதில் செகெண்ட் ஹீரோயின் ரோலில் நடித்திருந்தார் மோனல். அந்த படம் மோனலுக்கு அங்கீகாரத்தை கொடுக்கவே அடுத்ததாக வெளியான பார்வை ஒன்றே போதும் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.




அக்கா சிம்ரன் அளவிற்கு தமிழ் சினிமாவில் மோனல் அடையாளம் காணப்படவில்லை என்றாலும் அவ்வபோது சில படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாது  கன்னடம் , தெலுங்கு , இந்தி என ஒரு சில படங்களில் நடித்து வந்தார். திடீரென சினிமாவை விட்டு தனது சொந்த மாநிலத்திற்கு சென்ற மோனல் , காதல் தோல்வியால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அதன் பிறகு தன்னை தேத்திக்கொண்டு மீண்டும் கெரியரில் கவனம் செலுத்த வேண்டும் என சென்னை வந்தவர், யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் உள்ள தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார்.


தற்கொலைக்கு முன்னதாக மோனல் எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் “ நான் உண்மையான ஆம்பளைய இன்னும் பார்க்கவே இல்லை “ என எழுதப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் பம்மல் கே சம்பந்தம் ஷூட்டிங்கில் இருந்த சிம்ரன் இதனை சற்றும் எதிர்பாரவில்லை. ஆசை தங்கை மறைந்த துக்கம் யாருக்குத்தான் இருக்காது. அந்த சமயத்தில் மோனல் காதல் விவகாரம் , பத்திரிக்கைகளில் அதிகமாக பேசப்பட்டது. முதல் பட நாயகன் குணாலை காதலித்ததாக பத்திரிக்கைகள் எழுத தொடங்கின. இதற்கு சிம்ரன் விளக்கம் அளித்திருந்தார். அதாவது “ என் தங்கை  காதல் தோல்வியால் உயிரிழந்தது உண்மைதான். ஆனால் அவர் குணாலை காதலிக்கவில்லை. பிரபல நடன இயக்குநரின் தம்பி  பிரசன்னா சுஜித்தான் காரணம்” என குற்றம் சாட்டி , பிரசன்னா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் மீது  காவல்துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால் போதிய ஆதாரம் இல்லாமல் வழக்கு தள்ளுபடியானது. 







இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது தங்கையை நினைவு கூர்ந்த நடிகை சிம்ரன் ” நீ எங்களை விட்டு பிரிந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் நீ எப்போதுமே என்னில் கொஞ்சம் இருக்க. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன் மோனு. எப்போதுமே“ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் கீழ் , மோனலும் சிம்ரனும் ஒரே மாதிரியான உடை மற்றும் தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார் சிம்ரன் .