STR 50 : 50 ஆவது படத்தில் தயாரிப்பாளராக களமிறங்கும் சிம்பு..கமலுடன் கருத்து வேறுபாடா ?
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த எஸ்.டி.ஆர் 50 படத்தை கமல் தயாரிக்க இருந்த நிலையில் இப்படத்தை சிம்புவே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சிலம்பரசன்
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கேன ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் சிம்பு. நடிப்பு , பாடகர் , இயக்குநர் என பல திறமைகளை கொண்டவர். ஆனால் படப்பிடிப்பிற்கு சரியாக வராதது , தனிப்பட்ட உறவு சர்ச்சைகள் என அவரது திரைவாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. மாநாடு படத்தில் தனது எடையை குறைத்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்த சிம்பு தற்போது தனது 50 ஆவது படத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். அடுத்தடுத்து பல இயக்குநர்களுடன் அவரது பட அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள்
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது பழைய ஸ்டைலில் ஒரு கதையில் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் எஸ்.டி.ஆர் 49 படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. அடுத்தபடியாக சிம்புவின் 50 ஆவது படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளராக களமிறங்கும் சிம்பு
கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இந்த படத்தை இயக்கவிருக்கிறார். பாகுபலி மாதிரியான வரலாற்று கதைக்களத்தில் சிம்பு இரு வேடங்களில் இப்படத்தில் நடிப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. படத்தின் முதற்கட்ட ஃபோஸ்டர் வெளியான பின் அடுத்தடுத்த படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு கமலின் தக் லைஃப் படத்தில் சிம்பு எதிர்பாராத விதமான இணைந்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
தற்போது சிம்பு தனது 50 ஆவது படத்தைப் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். ஆத்மன் சினி ஆர்ட்ஸ் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள சிம்பு தனது 50 ஆவது படத்தை தானே தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த படம் தனக்கும் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு பெரிய கனவு என்று சிம்பு தெரிவித்துள்ளார்.