நடிகை சரண்யா துராதி BMW X5 கார் வாங்கியுள்ளார். இந்தக் காரை தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், நயன்தாரா மட்டுமே வைத்திருக்கிறார்களாம். இதன் விலை ரூ.1 கோடியே 14 லட்சமாம்.


தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகானவர் சரண்யா துராடி. தனது பிழையற்ற, அழகான உச்சரிப்பால் செய்தித்துறையில் காலூன்றினார். லண்டன் ஒலிம்பிக்ஸ் நேரலையில் தொகுத்து வழங்கி கவனம் ஈர்த்தார். துருதுருவென இருக்கும் சரண்யா, தன் அழகையும், திறமையையும் வீணடிக்காமல் சினிமாத் துறையிலும் தடம் பதிக்க முயற்சி செய்தார். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய படங்களில் நடித்தார்.


இந்தப் படங்கள் அவருக்கு மிகப்பெரிய என்ட்ரியென்ற வகையில் அமையவில்லை. மீண்டும் செய்தித் தொலைக்காட்சியில் தனக்கே உரித்தான பாணியில் செய்திகள், சிறப்பு நேர்காணல்கள், அரசியல் விவாத மேடைகள் என களைகட்டியது அவருக்கு.


திடீரென செய்தி சேனல்களுக்கு டாடா சொன்ன சரண்யா துராதி, சீரியல் உலகில் கால் பதித்தார். அவருக்கு சின்னத்திரை சீரியல் கைகொடுத்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். விஜய் டிவி தான் இவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தது. நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்தார். தொடர்ந்து அவர், ரோஜா என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். இந்த இரண்டுமே மெகா ஹிட் அடிக்க சன் டிவியின் ரன் சீரியலில் நடித்தார். ரன் சீரியலுக்கு எக்கச்சக்க வரவேற்பு. இந்த நிலையில் தான் யார் கண் பட்டதோ என்று கேட்கும்படி ரன் சீரியலில் இருந்து சரண்யா திடீரென விலகினார்.


மீண்டும் விஜய் டிவி சீரியல் ஒன்றில் ஒப்பந்தமானார். விஜய் டிவியின் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலிலும் நடித்தார். இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில், சரண்யா துராதிதான் புதிதாக வாங்கியுள்ள சொகுசு காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.






அந்த பதிவில் அவர், ஒரு புதிய காதல் கதை தொடங்குகிறது. எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினராகியிருக்கும் 'சீம்சு'வை வரவேற்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.


இந்தக் காரை தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், நயன்தாராவுக்குப் பின்னர் இவர் தான் வாங்கியுள்ளார் என்பதுதான் ஹைலைட்.