குஜராத் மாநிலம், ஜாம்நகரில் ஜாம் ஜாம் என நடைபெற்றது இந்தியாவின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டம்.  மார்ச் 1 முதல் 3ம் தேதி வரை நடைபெற்ற இந்த மூன்று நாட்கள் கொண்டாட்டத்தில் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் உள்ள ஏராளமான பிரபலங்கள், முக்கியப் புள்ளிகள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 


 



இந்தக் கொண்டாட்டத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீட்சித், ஷாருக்கான், சல்மான்கான், அமீர் கான், ராணி முகர்ஜி, ராம் சரண் அவரின் மனைவி உபாசனா எனப் பலர் கலந்து கொண்டனர். ஷாருக் கான்,  சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் மேடையில் நடனமாடினார்கள்.


இரண்டாம் நாள் கொண்டாட்டத்தின் போது ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் மூவரும் இணைந்து ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற பாடலான 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடினார்கள். அப்போது அந்த பாடலில் ஒரிஜினலாக ஆடிய நடிகர் ராம் சரணை, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மேடைக்கு அழைத்தார். “இட்லி, வடை, சாம்பார்’ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? உடனே மேடைக்கு வரவும்” என குரல் கொடுத்தார். பின்னர் நால்வரும் இணைந்து ஹூக் டான்ஸ் ஃபர்பார்ம் செய்தனர். நடிகர் ஷாருக்கான், ராம் சரணை இப்படி அழைத்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 


  




இந்நிலையில் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபசனாவின் ஒப்பனைக் கலைஞரான ஜெப ஹாசன் இந்த சம்பவம் குறித்து தன்னுடைய மனவருத்தத்தை தெரிவித்து கொண்டார். "நான் நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகன். இருப்பினும் அவர் ராம் சரணை மேடையில் வைத்து இட்லி வடை சாம்பார் என் அழைத்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. அவர் செய்தது ஒரு அவமரியாதையான செயல். அதனால் நான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டேன்" என தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்து இருந்தார் ஜெப ஹாசன். 


 



தென்னிந்தியர்களை அவமதிப்பது போல அவர் ராம் சாரணை அழைத்த விதம் ஷாருக்கான் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. “இது அவரின் இனவெறியைக் காட்டுகிறது, ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஒரு நடிகரை இப்படி அழைப்பது அவமரியாதையைக் காட்டுகிறது” என நெட்டிசன்கள் பலரும் கடுமையாக கண்டனங்களை முன்வைத்து வருகிறார்கள்.


 






 


பலரும் ஷாருக்கானுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வரும் அதே வேளையில் ஒரு சில ஷாருக்கான் ரசிகர்கள் அவர் விளையாட்டுத்தனமாக, ஒரு நகைச்சுவைக்காக தான் அப்படி ராம் சரணை அழைத்துள்ளார் என ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.