மதுரை பின்னணியில் உருவாகும் படம் என்றாலே தன்னை ரவுடி கதாபாத்திரத்திற்காகத்தான் அழைப்பார்கள் என்று நினைத்ததாகவும், ஆனால் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' இணையத் தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனக்கே ஆச்சரியமாக இருந்ததாகவும் நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகும் இந்த தொடரை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

Continues below advertisement

பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார், யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர்-காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

"நான் மணி கதாபாத்திரம்னுதான் நினைத்தேன்"

நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், "இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் மதுரையில் வந்து கதையை சொன்னார். 'தி மிஸ்டரி ஆஃப் மணி' என்ற தலைப்பை கேட்டவுடன், நான் மணி கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறேன் என்றுதான் நினைத்தேன். மதுரை பின்னணி என்பதால் மணி, குட்டிப்புலி மாதிரி ரவுடி கதாபாத்திரம்தான் இருக்கும் என எதிர்பார்த்தேன். 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் யாரும் என்னை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை. அதனால்தான் இரண்டு, மூன்று முறை இயக்குநரிடம் 'நான் மணி கேரக்டரா? இல்ல மூஸா ராசா என்ற போலீஸ் அதிகாரியா?' என்று கேட்டேன். அவர், 'நீங்கள் போலீஸ் அதிகாரி மூஸா ராசாவாகத்தான் நடிக்கிறீர்கள்' என்றார்," என்று கூறினார்.

Continues below advertisement

இயக்குநரின் அணுகுமுறை என்னை கவர்ந்தது

தொடர்ந்து பேசிய அவர், "போலீஸ் என்றதும் கம்பீரமாக நடக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இயக்குநர் அப்படி வேண்டாம், மதுரையில் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி எப்படி இருப்பாரோ அப்படியே இயல்பாக நடிக்க வேண்டும் என்றார். ஒரு நிரபராதியை காப்பாற்ற போராடும் போலீஸின் பார்வையில்தான் இந்தக் கதை நகர்கிறது. இதுவரை வந்த விசாரணை த்ரில்லர்களில் குற்றவாளியை கண்டுபிடிப்பதுதான் முக்கியமாக இருக்கும். ஆனால் இந்த தொடரில், நிரபராதியை காப்பாற்ற போலீஸ் போராடுவதுதான் கதையின் பரபரப்பாக இருக்கும்," என்றார்.

"இந்த தொடர் எனக்கு புதிய பாதையைத் திறக்கும்"

மேலும், "இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பில் லேசாக சிரித்தால்கூட 'மூஸா ராசா சிரிக்க மாட்டார்' என்று இயக்குநர் சொல்லிக்கொண்டே இருப்பார். முதல் இரண்டு நாட்கள் சற்று கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு அந்த கதாபாத்திரத்திற்குள் முழுமையாக சென்றுவிட்டேன். இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்தேன். இந்த இணையத் தொடர் வெளியான பிறகு எனக்கு இன்னும் நிறைய போலீஸ் கதாபாத்திரங்கள் வரும் என்று நம்புகிறேன். மேலும், 'வதந்தி' முதல் சீசனில் எஸ்.ஜே. சூர்யா மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும், அதற்கும் இந்த சீசனுக்கும் கதையில் எந்த தொடர்பும் இல்லை. இந்த தொடரும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும்," என்று சசிகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.