இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் 2 ஆம் பாகம்(Sarpatta Parambarai 2) உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் “சார்பட்டா பரம்பரை”. இந்த படத்தில் ஆர்யா, துஷ்ரா விஜயன், பசுபதி, ஜான் கொக்கைன், ஜான் விஜய்கலையரசன், ஷபீர் கல்லறக்கல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரைக்கு இசையமைத்திருந்தார். அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் கவர்ந்தது. 






இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கப்பட உள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்னும் படக்குழு பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் யார் ஹீரோயின், முக்கிய கேரக்டர்களில் நடிக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முதல் சார்பட்டா பரம்பரையின் கதை 


வடசென்னையில் 1970களின் காலக்கட்டத்தில் புகழ்பெற்று விளங்கிய குத்துச்சண்டை போட்டியில் சார்பட்டா - இடியாப்ப பரம்பரையினர் காலம் காலமாக மோதிக் கொள்கின்றனர். இருவருமே குத்துச்சண்டை வெற்றி, தோல்வியை கௌரவப்பிரச்சனையாக பார்க்கிறார்கள். இதனிடையே ஒரு போட்டியில் இடியாப்ப பரம்பரை வீரர் வேம்புலியிடம், சார்பட்டா பரம்பரை வீரர் மீரான் தோற்கிறார்.


இதனால் ஏற்பட்ட வெற்றி ஆரவாரத்தில் சார்பட்டா பரம்பரையின் குருவான ரங்கன் வாத்தியாரை எதிரணியினர் சீண்டி பார்க்கின்றனர். இதனால் சார்பட்டா பரம்பரையின் சார்பில் அடுத்த போட்டியில் ரங்கன் வாத்தியாரை மானசீக குருவாக ஏற்ற கபிலன் களம் காண்கிறார். ஆனால் அரசியல் சூழல் கபிலன் பங்கேற்ற போட்டி தடை படுகிறது. அதன்பிறகு கபிலன் வாழ்க்கையில் என்ன நடந்தது, சார்பட்டா பரம்பரை பெருமை என்ன ஆனது என்பது இப்படத்தின் கதையாக அமைந்தது.