சர்தார் படத்தில் நடித்துள்ளது பற்றியும், தமிழ் சினிமா எப்படியெல்லாம் மாறியுள்ளது என்பது பற்றியும் நடிகை லைலா ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். 


பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 


2000 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லைலா அதன்பின்னர் அஜித், விக்ரம், சூர்யா, பிரசாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். குறிப்பாக சூர்யாவுடன் மட்டும் நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன் ஆகிய 3 படங்களில் லைலா ஜோடி சேர்ந்தார். இவர் கிட்டதட்ட 16 வருடங்களுக்குப் பின் சூர்யாவின் தம்பி கார்த்தி படமான சர்தாரில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 






இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு லைலா நேர்காணல் அளித்துள்ளார். அதில் இந்த 16 வருடத்தில் ஹீரோயினுக்கு அம்மா, சகோதரி கேரக்டரில் நடிக்க கூப்பிட்டாங்க. இதேபோல் சீரியல் வாய்ப்பு கூட வந்துச்சு. ஆனால் நல்ல கதையில நடிக்க ஆசைப்பட்டு காத்துட்டு இருந்தேன். அப்படித்தான் சர்தார் பட கதையை மித்ரன் சொன்னார். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஷூட்டிங் போனப்ப ரொம்ப ஆர்வமா இருந்துச்சு என தெரிவித்துள்ளார். 


மேலும் சூர்யா போல கார்த்தியும் என்னிடம் நன்றாக பழகினார். இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிக்கிட்டே இருப்போம். வீட்டு பொறுப்பு இருந்ததால தான் நான் சினிமாவை விட்டு போனேன். ஆனால் எனக்கு நடிப்பது என்பது மிகவும் பிடிக்கும் என லைலா கூறியுள்ளார். அப்போது அவரிடம் ஜோதிகாவுடன் த்ரீ ரோசஸ், சூர்யாவுடன் சில படங்கள் நடித்த உங்களுக்கு அவர்களின் காதல் கதையை யார் முதல்ல சொன்னாங்க என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்கு ஜோதிகா என நினைக்கிறேன். த்ரீ ரோசஸ் படத்துல நடிச்சப்ப அந்த காதல் கதையை அவர் சொன்னார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வப்போது ஜோதிகாவை அழைத்து செல்ல சூர்யா வருவார் எனவும் லைலா கூறியுள்ளார்.