மலையாள சினிமாவில் நடிக்கும்போது தனக்கு வந்த மிகப்பெரிய அட்வைஸ் ஒன்றை காந்தா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

காந்தா படம்

அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “காந்தா” . நடிகர் ராணா டகுபதி இப்படத்தை தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜானு சந்தர் பாடல்களுக்கு இசையமைக்க பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜோய் உருவாக்கியுள்ளார். இந்த படம் நவம்பர் 14 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

சமுத்திரகனிக்கு கிடைத்த அட்வைஸ்

இதனிடையே கொச்சியில் காந்தா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய சமுத்திரகனி மலையாள சினிமாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பேசினார். கடைசியாக அவர் 2016 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய ஒப்பம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 8 ஆண்டுகள் எந்த படமும் செய்யவில்லை. 2024 ஆம் ஆண்டு ஒரு அஸ்வந்தேதிட்ட தொடக்கம் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 

Continues below advertisement

காந்தா  படம் மூலம் மீண்டும் தனது பெரிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். ஏன் இந்த இடைவெளி என பேசிய சமுத்திரகனி,  இயக்குநர் பிரியதர்ஷன் கொடுத்த அட்வைஸ் தனக்கு எப்படி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் படங்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை விளக்கினார். 

சரியான படங்கள் முக்கியம் 

அதாவது ஒப்பம் படம் முடிந்ததும் இயக்குநர் பிரியதர்ஷன் என்னிடம் பேசினார். அப்போது மலையாள சினிமா ரசிகர்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். ஆனால் அதற்காக தவறான வகையான (முக்கியத்துவம் இல்லாத) படங்களில் நடிக்காதீர்கள். எவ்வளவு காலம் ஆனாலும் பரவாயில்லை. சரியான படங்களை தேர்வு செய்யுங்கள் என அவர் கூறியது தனக்கு ஒரு ஒளிவிளக்காக மாறியதாக குறிப்பிட்டார்.

இவை அனைத்தையும் பிரதிபலிப்பதாக காந்தா படம் உள்ளது. இந்த படம் மொழித் தடை இல்லாமல் அனைவராலும் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும். உலகளாவிய மொழி மற்றும் சரியான படத்துடன் மீண்டும் நான் வந்துள்ளேன் என சமுத்திரகனி நெகிழ்ச்சியாக தெரிவித்தார். மேலும் நடிகர் துல்கர் சல்மானை பற்றி குறிப்பிடும்போது அவர், அசாதாரண நடிகர் என புகழ்ந்தார்.