நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ புஷ்பா - பாகம் 1’. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான இந்தத் திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப்படத்தில் பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.


தெலுங்கில் ‘ ஓ ஓ அண்டவா’ என்ற பேரில் வெளியாகியிருக்கும் இந்த பாடலை சந்திரபோஸ் எழுத, இந்தப் பாடலை இந்திரவதி பாடியிருக்கிறார். தமிழில் விவேகா இந்த பாடல் வரிகளை எழுத நடிகை ஆண்ட்ரியா இந்தப் பாடலை பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியாகியிருக்கும் இந்தப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான நாளிலிருந்தே இந்தப் பாடல் சர்ச்சைகளில் சிக்கியது.


ஆந்திராவை சேர்ந்த ஆண்கள் அமைப்பு ஒன்று இந்தப் பாடல் ஆண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ஆண்கள் செக்ஸை மட்டும் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது போல பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனால் பாடலை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.


பாடல் வெளியான நாளிலிருந்தே சர்ச்சைகளால் கவனம் பெற்ற இந்தப் பாடலை ரசிகர்கள் திரையில் காண ஆவலாக இருந்தனர். இந்த நிலையில் நேற்று இந்தப் பாடல் திரையரங்குகளில் ஒளிப்பரப்பான போது திரையரங்களில் இருந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.