பிரபல நடிகை சமந்தா அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது மேலாளர் பதிலளித்துள்ளார். 


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து  சமந்தா கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இதனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களின் கவனம் குவிந்து வருகிறது.






தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் நடிப்பில் யசோதா படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில்  இதன் டீசர் வெளியாகி படம் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிஹரிஷ் இயக்கியுள்ள யசோதா படத்தில்  வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து சில நாட்களாக ஒரு தகவல் பரவி வந்தது. 






அதாவது அவர் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் சமந்தா அமெரிக்கா சென்றது உண்மைதான் என சொல்லப்பட்டுகிறது. அதேசமயம் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெறும் வதந்தி என சமந்தாவின் மேலாளர் மகேந்திரா தெரிவித்துள்ளார். ஏற்கனவே அஞ்சான் படத்தின் ஷூட்டிங்கின் போது அதிக வெளிச்சத்தில் நடித்ததால் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக சமந்தா சிகிச்சைப் பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.