கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோ லாக் அப் இன் சமீபத்திய எபிசோடில், போட்டியாளர்கள் சிறுவயது பாலியல் துன்புறுத்தலின் அதிர்ச்சிகரமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்தவார லாக்கப் எபிசோட் மிகவும் உணர்ச்சிகரமாக மாறி பார்வையாளர்களை கண்ணீர் விட செய்தது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் கலந்துகொண்ட முனாவர் ஃபரூக்கி குழந்தையாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைப் பற்றி கூறியது அனைவரையும் கலங்க செய்தது.


இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கங்கனா ரனாவத், தானும் சிறுவயதில் அவற்றை கடந்து வந்ததாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவர்கள் பேசுவதைக் கேட்ட திருநங்கை சாயிஷா ஷிண்டே, தானும் இதுபோன்ற விஷயங்களை சிறுவயதில் அனுபவித்ததாக கூறினார். இதைப் பற்றி வெளியில் பேச முயன்றபோது மக்கள் தன்னை எப்படி பார்த்தார்கள் என்பது குறித்தும் அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.



சாயிஷா தனது பாலியல் சீண்டல் பற்றிக் குறிப்பிடுகையில், கடந்த காலத்தில் தனக்கு இப்படி நேர்ந்தது என்பதற்காக, தான் ஓரினச்சேர்க்கையாளர் என்று மக்கள் கூறியதையும் அவர் பகிர்ந்து கொண்டார். “முனாவரும், கங்கனாவும் தங்கள் பாலியல் சீண்டல் குறித்து கூறும்போது, மக்கள் எப்படி அதனை எடுத்து கொண்டார்கள் என்று கூறினீர்கள். அப்போது எனக்கு எனது சொந்த அனுபவம் நினைவுக்கு வந்தது. நான் இதைப் பற்றி பிறரிடம் சொன்னபோது அவர்கள், 'அதனால்தான் நீ இப்படி இருக்கிறாய், செக்சிஸ் மிகவும் ஆர்வமாக உள்ளாய். பெண்களின் ஆடைகளை அணிவதால்தான் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்கிறீர்கள்' என்றெல்லாம் கூறினார்கள். அது என் மனதை மிகவும் பாதித்தது. அதன்பிறகு யாரிடமும் இந்த விஷயத்தைப் பற்றி பேச எனக்கு தைரியம் வரவில்லை." என்று கூறினார்.



சாயிஷா ஒரு பிரபல ஆடை வடிவமைப்பாளர். தீபிகா படுகோன், கரீனா கபூர், கத்ரீனா கைஃப், ஷ்ரத்தா கபூர், பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித், சன்னி லியோன், டாப்ஸி பன்னு, பூமி பெட்னேகர் மற்றும் ஹினா கான் போன்ற பிரபலங்களுடன் பணிபுரிந்துள்ளார். சாயிஷா தனது சிறுவயதில் ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினர் தன்னை எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்பதை பகிர்ந்துள்ளார். அவர்களின் அடையாளத்தை வெளியிடாமல், தனக்கு 10 வயது இருக்கும்போது நிகழ்ந்த சம்பவம் குறித்து அவர் பேசும்போது, "அந்த நபர் தன்னை விட சில வயதுதான் மூத்தவர் என்பதால், இது பாலியல் வன்கொடுமையா என்ற குழப்பத்தில் இருந்தேன். திரும்ப திரும்ப நிகழ்ந்தபோதுதான் எனக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தெரியவந்தது” என்றார்


நிகழ்ச்சி தொகுப்பாளர் கங்கனா ரனாவத் அந்த நபரை மீண்டும் சந்தித்தீர்களா என்று கேட்டபோது, இல்லை என்று பதில் அளித்தார். இருப்பினும், இப்போது அவர் இந்த விஷயத்தை நிகழ்ச்சியில் வெளிப்படுத்திவிட்டதால், இதன்மூலம் அந்த நபர் தெரிந்துகொள்வார் என்று சாயிஷா ஷிண்டே பகிர்ந்து கொண்டார். சாயிஷா வேறு ஸ்வப்னில் வேறு, இரண்டு நபர்களும் வெவ்வேறு என்பதை அந்த நபர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சாயிஷா மேலும் கூறினார். ஸ்வப்னில் என்பது அவர் பாலியல் சீரமைப்பு செய்துகொள்வதற்கு முன் இருந்த பெயர். இது போன்ற சூழல்களை எதிர்கொள்ள தயங்கவே கூடாது என்று சாயிஷா மேலும் கூறினார்.