Vivek 2nd death anniversary: பசுமை காதலனே!  சமூகஅக்கறை கொண்ட காமெடியனே... விவேக் 2ம் ஆண்டு நினைவு தினம்! 

சமூக சீர்திருத்த கருத்தினையும் மக்களிடம் கொண்டு சேர்த்த சின்ன கலைவாணர் விவேக் கருத்து சொன்னாலும் அதிலும் நக்கலும் நையாண்டியும் கலந்து காமெடி செய்த தனி சிறப்பு கொண்ட விவேக் 2ம் ஆண்டு நினைவு தினம்.

Continues below advertisement

கிரியேட்டிவிட்டி கிங் என்ற பட்டத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்த இடத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்த கூடிய ஒரு கலைஞன் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக். மனதளவில் யாரையும் புண்படுத்தாமல் தனது தனித்துவமான நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தவரின் நினைவு தினம் இன்று.

Continues below advertisement

 

 

சமூக சிந்தனையாளன் :

இந்த கலைஞனின் திறமைகளை நன்கு அறிந்து அவற்றை வெளிகொண்டுவந்த பெருமை இயக்குனர் பாலாசந்தரையே சேரும். தன்னுடைய 'மனதில் உறுதி வேண்டும்' படத்தின் மூலம் விவேக்கை அறிமுக படுத்தினார். விவேக் என்ற ஒரு நடிகன் இருப்பதை அடையாளம் காட்டியது 'புதுப்புது அர்த்தங்கள்' படத்தில் அவரின் பிரபலமான 'இன்னிக்கு செத்த நாளைக்கு பால்' வசனம். அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக கலக்கிய விவேக் தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் என்எஸ்கே ஸ்டைலில் நகைச்சுவையோடு சேர்த்து மக்கள் தொகை அதிகரிப்பு, மூடநம்பிக்கை, ஊழல், லஞ்சம் இப்படி சமூக சீர்திருத்த கருத்தினையும் மக்களிடம் கொண்டு சேர்த்ததால் அவர் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார். கருத்து சொன்னாலும் அதிலும் நக்கலும் நையாண்டியும் கலந்து காமெடி செய்வது விவேக்கின் தனி சிறப்பு.

ஒரு காலேஜ் புரபசராக வேண்டும் என ஆசைப்பட்ட நடிகர் விவேக் ஒரு நடிகரானது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். அவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர், பாடகர், ஆர்மோனியம், தபலா, வயலின் என இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை பெற்றவர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். 

பசுமை காதலன் :

விஞ்ஞானி மற்றும் குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் அவர்களின் தீவிரமான பற்றலரான விவேக் சமுதாயத்தின் மீது இருந்த சமூக அக்கறையோடு நாட்டில் இருக்கும் வறட்சியை மாற்றும் வகையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை செயல்படுத்தி மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக பசுமை காதலனாக திகழ்ந்து வந்தார்.  அதுமட்டுமின்றி அவரின் கொள்கைகளை மாணவர்களுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு தூதராகவும் விளங்கினார். தனது 13 வயது மகன் உடல்நலக்குறைவால் இறந்ததால் அவரின் நினைவாக ஒரு அறக்கட்டளை தொங்கி அதன் மூலம் பல சமூக சேவைகளை செய்து வந்தார்.

 

ஈடுசெய்ய முடியாத இழப்பு :

பத்மஸ்ரீ, பிலிம் பேர், தேசிய தமிழ் திரைப்பட விருது என ஏராளமான விருதுகளை பெற்றவர். சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் பல படங்களில் நிரூபித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி அதிகாலை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் இறப்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவர் இந்த உலகை விட்டு பிரிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவரின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பேரிழப்பாகவே இருக்கிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola