தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகர் ரமேஷ் திலக். சமீபத்தில் அவர் 'சாய் வித் சித்ரா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உருவகேலி தொடர்பாக தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
ஆர் ஜேவாக தனது பயணத்தைத் தொடங்கிய ரமேஷ் திலக், குறும்படங்கள் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கிய 'சூது கவ்வும்' திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற அவர், பின்னர் 'நேரம்', 'காக்கா முட்டை', 'கபாலி', 'ஒரு நாள் கூத்து', 'குட் நைட்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் தொடர்ந்து நடித்து வரும் ரமேஷ் திலக், பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
உருவகேலி செய்த சீனியர் நடிகர்
சமீபத்தில் சித்ரா லட்சுமணன் உடனான நேர்காணலின் போது திரைத்துறையில் தான் உருவகேலி செய்யப்பட்டது குறித்து மனம் திறந்து பேசினார். “ நிறைய போலியான ஐடிக்கள் மூலம் என்னை நிறைய விமர்சித்தார்கள். 100 பேர் நம்மை புகழ்ந்திருந்தாலும் நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் யாராவது ஒருத்தர் திட்டினால் அது நம்மை பாதிக்கும். என்னுடைய முகம் உருவத்தை வைத்து நிறைய கேலி செய்தார்கள். இந்த முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டாதீர்கள் குமடிக்கிட்டு வருது என்று சொல்வார்கள்
அதே போல் திரைத்துறையைச் சேர்ந்த சில நடிகர்கள் தங்களுடன் என்னை ஒப்பிட்டு பேசியிருக்கிறார்கள் . அவர்களது நண்பர்களுடன் பேசும்போது என்னை வைத்துக்கொண்டு ‘இப்ப எல்லாம் இந்த மாதிரியானவங்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்குது ‘ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அந்த மாதிரியான இடங்களை விட்டு நகர்ந்து போய்விடுவேன் . நீங்கள் ஒரு சீனியர் தான் ஆனால் நான் உங்கள் வெற்றியை பறிக்கவில்லை. நீங்க நல்ல இடத்தில் இருந்தால் உங்களுக்கு நல்ல கதை அமையும். நான் நடித்த எல்லா படங்களும் வெற்றியில்லை. ஒரு படம் வெற்றிபெறும் இன்னொரு படம் தோல்வியடையும் என்று எனக்கு நானே நினைத்துக்கொண்டு அந்த இடத்தை கடந்து போய்விடுவேன்’ எனரமேஷ்திலக்கூறியுள்ளார்.
