நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினர் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ராம்சரணின் தந்தையும், நடிகருமான சீரஞ்சிவி கொனிடேலா ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குழந்தைகளை எங்கள் குடும்பத்தில் வரவேற்பது, தாத்தா பாட்டிகளாகிய எங்களுக்கு தூய மகிழ்ச்சி மற்றும் தெய்வீக ஆசீர்வாதத்தின் தருணமாக உள்ளது. இந்த நேரத்தில் அனைவரின் பிரார்த்தனைகள், அன்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றி கூறுகிறோம் எனவும் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
ராம்சரண், உபாசனா தம்பதியினர் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவரான உபாசனாவும், அவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கினர். அதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். 10 ஆண்டுகளுக்குப் பின் 2023ம் ஆண்டு இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு கிளின்காரா என பெயரிட்டனர்.
சீரஞ்சிவி வெளியிட்ட பதிவு
இதனைத் தொடர்ந்து உபாசனா 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரின் வளைகாப்பு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இரட்டை குழந்தைகள் என்பதை உறுதி செய்த நிலையில் அவருக்கு பிப்ரவரி 1ம் தேதி குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 31ம் தேதி இரவு குழந்தை பிறந்துள்ளது.
ராம்சரணுக்கு குழந்தை பிறந்துள்ள செய்தி வெளியான நிலையில் காலை முதல் ரசிகர்கள் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் கூடி வருகின்றனர். அவர்கள் ராம்சரணுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கோஷமிட்டு வருவதாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.