ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து அவர்களின் படைப்பில் வெளியான திரைப்படம் 'காந்தாரா'. சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வரும் இப்படம் கன்னடத்தில் உருவானாலும் அதன் வெற்றியால் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்திலும் வெளியிடப்பட்டது. 


 



 


பல பிரபலங்கள் வாழ்த்து :


ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கியதோடு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் அபாரமான நடிப்பு பாராட்டுகளை குவித்தது. பல பிரபலங்கள் நேரடியாகவும், சோசியல் மீடியா மூலமாகவும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'காந்தாரா' திரைப்படத்தை பாராட்டி ட்விட்டர் மூலம் " படத்தை எழுதி இயக்கி, நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டிக்கு ஹாட்ஸ் ஆஃப். இப்படிப்பட்ட தரமான படத்தை கொடுத்த படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகள்” என ட்வீட் செய்திருந்தார். நடிகர் ரிஷப் ஷெட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தும்  வாழ்த்துக்களை பெற்றார். 


 







சூப்பர் ஸ்டார் ரிஷப் ஷெட்டிக்கு பரிசளிப்பு :


அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ஒரு தங்க செயின் ஒன்றை இன்று பரிசளித்துள்ளார். 'காந்தாரா' போன்ற அபூர்வமான அருமையான திரைப்படம் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பார்க்க முடியும். அப்படி ஒரு தரமான படைப்பை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் என கூறி கோல்ட் செயின் பரிசளித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது. 


 







வசூலிலும் சாதனை :


படத்தில் ரிஷப் என்ட்ரியே திரையரங்குகளை தெறிக்கவிட்டது.  கூஸ் பம்ப்ஸ்  காட்சிகளால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். இந்த முழு நீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றது. காந்தாரா திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டை பெற்றதோடு 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட 'காந்தாரா' திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.