லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் விரைவில் படக்குழு அடுத்த ஷெட்யூலை தொடங்க உள்ளது. 

படம் குறித்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் கூறும்போது, “சென்னை முழுவதும் பென்ஸ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஷெட்யூலில் ராகவா லாரன்ஸ் நடித்த முக்கியமான காட்சிகளை படமாக்கினோம். உண்மையிலேயே இந்த ஷெட்யூல் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. சுதன் சார், ஜெகதீஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முழுமையான படைப்பு சுதந்திரத்திற்கும், ராகவா லாரன்ஸ் சாரின் முழுமையான ஒத்துழைப்பிற்கும் நன்றி. விரைவில் எங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். இதுமட்டுமல்லாது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்புகளையும் வெளியிட இருக்கிறோம்" என்றார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, நிவின் பாலி இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், பிரியங்கா மோகன், ராஷ்மிகா, மடோனா செபாஸ்டியன், போன்ற பலர் இப்படத்தில் நடிப்பதாககூறப்படுகிறது. இதுவே இந்த படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. 

முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், கூடிய விரைவில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆடம்பரமான பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே போல் இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.