செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக அதனை சந்திக்க உள்ளதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றி ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.


இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல்  லிமிட்டெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம்  மீடியா பிரைவேட் லிமிட்டட் இடையிலானது. அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா என பெரும் நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில், 2001ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. 


அதன் பின் ரன்,சண்டகோழி,வேட்டை,பீமா, பையா எனத் தொடர்ந்த லிங்குசாமியின் வெற்றிப் பயணம், அஞ்சான் படத்தில் இருந்து இறங்குமுகத்தில் பயணிக்கத் தொடங்கியது. 


இதனிடையே ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லிங்குசாமி, அதன்மூலம் தீபாவளி, பட்டாளம்,பையா, கும்கி, வழக்கு எண் 18/9, கோலிசோடா உள்ளிட்ட பல படங்களை சொந்தமாகவும் பிற நிறுவனங்களுடன் இணைந்தும் தயாரித்தார். 


இந்நிலையில், 2015ஆம் ஆண்டு நடிகர் கம்ல்ஹாசனின் உத்தமவில்லன் படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், அந்தப் படம் ஏற்படுத்திய நஷ்டத்தால் நிதி நெருக்கடியில் சிக்கியது.


மேலும், 2014 ஆம் ஆண்டு கார்த்தி, சமந்தா ஆகியோரது நடிப்பில்,  ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.1.3 கோடி கடன்  பெற்றிருந்தது.


இந்த கடன்தொகையை உரிய காலத்தில் திரும்பச் செலுத்ததாத நிலையில், லிங்குசாமி மீது பிவிபி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் லிங்குசாமி சம்பந்தப்பட்ட தொகைக்கு காசோலைகள் வழங்கினார். ஆனால் அவை வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்ப வந்தது. இதனையடுத்து லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு பிவிபி நிறுவனத்தால் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 


இதனை எதிர்த்து லிங்குசாமி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் முன்னதாக இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்தது. மேலும் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டுமென்ற உத்தரவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.