காலமானார் ஜமீன் கோட்டை பட ஹீரோ! கலைப்புலி ஜி சேகரன் யார் தெரியுமா?
ஜமீன் கோட்டை படத்தின் கதாநாயகனும் பிரபல தயாரிப்பாளர், இயக்குனருமான கலைப்புலி ஜி சேகரன் இன்று காலமானார்.

90-களில் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய பயத்தை காட்டிய திரைப்படம் ஜமீன்கோட்டை. இந்த படத்திற்கு கதை எழுதி, நாயகனாக நடித்தவர் கலைப்புலி ஜி சேகரன். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், விநியோகஸ்தராகவும் தமிழ் சினிமாவில் பன்முகத் திறன் கொண்டவராக திகழ்ந்தவர்.
காலமானார் கலைப்புலி ஜி சேகரன்:
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 73. இது ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் ஃபைனான்சியராகவும், விநியோகஸ்தராகவும் தனது வாழ்வைத் தொடங்கினார். பின்னர், பிரபல தயாரிப்பாளர் தாணு மற்றும் சூரி ஆகியோருடன் இணைந்து கலைப்புலி நிறுவனத்தில் பங்குதாரராக மாறினார்.
Just In




தமிழ் சினிமாவில் இன்றளவும் பேசப்படும் யார்? என்ற த்ரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நடிப்பு மட்டுமின்றி இயக்க்தின் மீதும் அவருக்கு ஆர்வம் இருந்தது. இதையடுத்து, அவர் 1988ம் ஆண்டு ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பின்னர், காவல் பூனைகள், உளவளாசி ஆகிய படத்தை இயக்கினார்.
ஜமீன் கோட்டை எனும் ப்ளாக்பஸ்டர் படம்:
இந்த நிலையில், 1995ம் ஆண்டு ராமச்சந்தர் இயக்கிய ஜமீன்கோட்டை படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த காலத்திலே த்ரில்லர் பேய் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை அச்சுறுத்தும் வகையில் த்ரில்லர் விருந்தாக அமைந்ததால் மாபெரும் வெற்றி பெற்றது. கடைசியாக 2008ம் ஆண்டு கட்டுவீரியன் என்ற படத்தை நடித்து இயக்கி தயாரித்திருந்தார். அந்த படத்திற்கு இசையும் அமைத்திருந்தார்.
பொதுமக்கள் அஞ்சலி:
அதன்பின்பு, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலமாகியுள்ள நிலையில் அவரது உடல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இவரது மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் கடந்த 2011ம் ஆண்டு கள்ளப்பருந்து என்ற படத்திற்கான பணிகளைத் தொடங்கிய நிலையில் பல காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.