சினிமாவை கணிக்க தெரிந்தால் வேறு தொழிலே தேவையில்லை என தயாரிப்பாளர் காஜா மொய்தீன் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் தனது சினிமா அனுபவம் குறித்து பேசினார். அதில், “எனக்கு சினிமாவில் முரளி நல்ல நண்பர். புதிய காற்று படத்தை நானும், அவரும் தான் இணைந்து தயாரித்தோம். அதனால் தான் நான் தயாரித்த பொற்காலம், பூந்தோட்டம், அள்ளி தந்த வானம் ஆகிய படங்களில் அவர் நடித்தார். அவரிடம் சினிமாத்தனம் என்பதே பார்க்க முடியாது. இதனிடையே ரோஜா கம்பைன்ஸ் தொடங்கிய ஆரம்ப காலத்தில் விக்ரமன் ஒரு கதை வைத்திருப்பதாக போய் சந்தித்தேன். இனி எல்லாம் சுகமே என்ற டைட்டிலில் ஒரு கதை சொன்னார். கார்த்திக் ஹீரோவாகவும், இளையராஜா இசையும் வேண்டும் என சொன்னார்.
இனி எல்லாம் சுகமே படத்தின் கதை இந்தியாவைச் சேர்ந்த பையனுக்கும், இலங்கையில் சிங்கள மொழி பேசும் பெண்ணும் இடையேயான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆனால் நடிகர் கார்த்திக் கொடுத்த குடைச்சலால் பூஜையோடு படம் நின்று விட்டது. அதன்பிறகு விக்ரமன் நிறைய படம் எடுத்து வேறு நிலைக்கு சென்று விட்டார்.
1993ம் ஆண்டு நான் ரோஜா கம்பைன்ஸ் தொடங்கி 1996ல் தான் முதல் படம் எடுத்தேன். 2007ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்தேன். 19 வருடங்களாக எந்த படமும் தயாரிக்கவில்லை. ஆனால் ரோஜா கம்பைன்ஸ் என்றால் என் பெயரையும், காஜா மொய்தீன் என்றால் ரோஜா கம்பைன்ஸ் பெயரையும் மக்கள் சொல்வது ஆச்சரியமாக உள்ளது. இது ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாக தான் உணர்கிறேன். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின் உண்மையான சிங்கத்தை வைத்து மாம்போ என்ற படத்தை தயாரித்து வருகிறேன். அந்த படம் மே மாதத்தில் ரிலீஸ் செய்கிறேன்.
பிரபு சாலமன் அந்த கதையை சொன்னார். நடிகர்களை நம்பி தான் நாசமாக போய் விட்டேன். விலங்குகளை வைத்து படம் எடுத்து பார்ப்போம் என நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளேன். இந்த படம் நிச்சயம் எல்லா மக்களையும் ஈர்க்கும்.
இதற்கிடையில் கார்த்திக்கை வைத்து சந்தித்த வேளை, ஆனந்த பூங்காற்றே படங்களை தயாரித்தேன். நாங்கள் 3 பேரும் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தின் இணைந்தோம். கார்த்திக் நல்ல நண்பர் தான். ஆனால் அவர் கொடுக்கும் தொல்லைகளை தாங்கி கொள்ள வேண்டும். ஷூட்டிங் என்று வந்து விட்டால் கார்த்திக்கை அடித்துக் கொள்ள முடியாது. அவர் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் இன்றைக்கு அவர் தான் சூப்பர் ஸ்டார் என்ற போட்டியில் இருந்திருப்பார். அவரால் மிகவும் சின்னபின்னமாகி விட்டேன்.
அப்போதெல்லாம் சினிமா எடுப்பதால் எந்த வித டென்ஷனும் இருக்காது. இப்போது ஒவ்வொரு நாளும் படாதபாடு பட வேண்டி உள்ளது. தயாரிப்பு செலவு தாறுமாறி போய்விட்டது. பெரிய படங்கள் எடுத்து மாயாஜாலம் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சின்ன பட்ஜெட் படங்கள் தான் வரவேற்பை பெறுகின்றது என்பது நிரூபணமாகி விட்டது.
பெண்ணின் மனதை தொட்டு படம் ரிலீஸான நாளில் வாஞ்சிநாதன் படத்தின் பூஜை நடைபெற்றது. அதை முடித்து விட்டு ஆபீஸூக்கு வந்தால் விநியோகஸ்தர்கள் இடையே அடிதடி நடக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. அப்போது விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. ஒரு மணி நேரத்தில் மொத்த ஏரியாவும் விற்று தீர்ந்து விட்டது. ஷூட்டிங் செல்வதற்கு முன்பே இரண்டு கோடி ரூபாய் அட்வான்ஸ் கிடைத்தது. அந்த மாதிரி சினிமா எல்லாம் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும். சினிமாவை கணிக்க தெரிந்தால் வேறு தொழிலே தேவையில்லை” என தயாரிப்பாளர் காஜா மொய்தீன் கூறியுள்ளார்.