தமிழ் சினிமா ரசிகர்களால் முத்தழகு என செல்லமாக அழைக்கப்படும் நடிகை பிரியாமணி, தமிழ் சினிமாவுக்கு 'கண்களால் கைது செய்' படம் மூலம் அறிமுகமானாலும் அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தேடி கொடுத்தது அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் அறிமுகமான பருத்திவீரன் படத்தில் நடித்த பிறகு தான். 


பருத்திவீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரமாக நடித்தார் என சொல்வதைக் காட்டிலும் வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். பிரியாமணியின் திறமை மொத்தமும் அப்படத்தில் கொட்டி கிடைக்கும். அது அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. அதை தொடர்ந்து தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரியா மணி கடந்த ஆண்டு வெளியான 'ஜவான்' படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



இந்த நிலையில் பாலிவுட் நடிகர் நடிகைகள் குறித்த அதிர்ச்சியான மற்றும் ஆச்சரியமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 


பாலிவுட் திரை நட்சத்திரங்கள் குறிப்பாக நடிகைகள் எங்கு சென்றாலும் அவர்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கும் கலைஞர்களை பாப்பராஸி என்பார்கள். அது ஜிம், ஏர்போர்ட், படப்பிடிப்புத் தளம் என எங்கு இருந்தாலும் அங்கு சென்று போட்டோ, வீடியோ எடுப்பார்கள். இதற்கு பின்னணியில் இருக்கும் விஷயம் என்னவென்றால், நடிகைகள் ஒரு ஏஜென்சி மூலம் அவர்கள் எங்கெங்கு செல்கிறார்களோ அந்த இடத்தைப் பற்றி முன்னதாகவே தகவல் கொடுக்க, அவர்கள் உடனே அந்த தகவலை பப்பராஸியிடம்  கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொல்வார்கள்.


அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வைரலாகி விடுவார்கள். இதற்கு கேப்ஷனாக அவர்கள் அந்த இடத்தில் 'ஸ்பாட்டட்' என போஸ்ட் செய்து வைரலாகி விடும். இது தான் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் ட்ரெண்டிங். பணம் கொடுத்து இதை பாலிவுட் நடிகைகள் செய்ய வைக்கிறார்கள்.


 



“பாலிவுட் நடிகைகளை மட்டும் சுத்தி சுத்தி போட்டோ எடுக்கிறார்களே என்னை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை?” என ஒரு முறை ஒருவரிடம் கேட்க, அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. “உங்களையும் இது போல போட்டோ எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்” என அவர் சொன்னதும் அதை கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒரு பப்ளிசிட்டி எனக்கு தேவையே இல்லை என மறுத்து விட்டேன்” எனக் கூறியுள்ளார் நடிகை பிரியாமணி. 


மேலும் இந்த ட்ரெண்ட் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் நுழைந்து விட்டது எனத் தெரிவித்துள்ளார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பிரியாமணிக்கு இந்த ஏஜென்சி மூலம் போட்டோ எடுத்து வெளியிடும் உண்மை தெரிந்ததும் அதை அவர் கலந்து கொண்ட நேர்க்காணலில் புட்டு புட்டு வைத்துவிட்டார்.