2017 ஆம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகர் பிரியா பவானி சங்கர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்தார் , தற்போது பல படங்களை கையில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கிய பிரியா பவானி சங்கர். அதன் பிறகு சீரியலில் நடித்தார். பின்னர் அவருக்கு இருந்த ரசிகர்களில் ஆதரவுதான் அவரை கோலிவுட் பக்கம் தலைக்காட்ட வைத்தது எனலாம். பிரியா பவானி சங்கர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக  வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அப்போது நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த புகைப்படத்தில் எலி பட கெட்டப்பில் இருந்த வடிவேலுவுடன் , பிரியா பவானி சங்கர் கதாநாயகிபோல போஸ் கொடுத்திருந்தார். அந்த  புகைப்படத்திற்கு கேப்ஷனாக “அந்த அதிர்ஷடசாலி பெண்” என குறிப்பிட்டிருந்தார்.






என்ன எலி படத்தின் இரண்டாம் பாகத்தில்  வடிவேலுவுடன், பிரியா பவானி சங்கர் நடிக்க போகிறாரா என பார்த்தால், அது ஏதோ ரசிகர் ஒருவர் செய்த மார்ஃபிங் வேலையாம். அது தனக்கு மிகவும் பிடித்துப் போனதால், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரியா.வடிவேலுவின் 61-வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தனது பிறந்தநாளை இயக்குநர் சுராஜ் உடன் கேக் வெட்டி கொண்டாடினார் வடிவேலு. எந்த பிறந்தநாளிலும் இல்லாத அளவிற்கு ,இந்த பிறந்தாள் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  கேக் வெட்டி இயக்குநருடன் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட புகைப்படம் வெளியாகி பலரின் வாட்ஸப் ஸ்டேட்டஸ்களை நிறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது






கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு  பிரச்னைகளால், சினிமாவில் நடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார் வடிவேலு. தற்போது அவரின்  அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. இதனையடுத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த வடிவேலு பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. வடிவேலு தற்போது ‘நாய்சேகர்’  என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். இந்தப்படத்தை சுராஜ் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. வடிவேலுவின் வருகைக்காக அவரது ரசிகர்கள் ஏங்காத நாளில்லை எனலாம்.