தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான பிரித்வி ராஜனின் குடும்பத்தில் அனைவரும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தான். 2001 ஆம் ஆண்டில் இயக்குநர் பாசிலால் நடிகராக அறிமுகம் செய்ய டெஸ்ட் ஷூட் எல்லாம் நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சி எடுபடாமல் போக, பாசில் பரிந்துரையின் பேரில் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பிரித்விராஜ்.


மலையாள தேசத்து நாயகன்:


2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கிளாஸ்மேட்ஸ் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படியான நிலையில் இயக்குநர் கே.வி. ஆனந்த் பிரித்விராஜை தமிழுக்கு அழைத்து வந்தார்.  கனா கண்டேன் படத்தில் வில்லனாக தோன்றினார். 


தமிழில் சத்தம் போடாதே, மொழி, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, ராவணன், காவியத்தலைவர் என மிகவும் கனமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் அடுத்தடுத்து பல படங்களிலும், தமிழில் நல்ல கதையாக தேர்வு செய்தும் நடித்து தனக்கென ரசிகர்களை கொண்டிருந்தார் பிரித்விராஜ். 


மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான “லூசிபர்” படத்தின் மூலம் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, ப்ரோ டாடி என்ற காமெடி படம் கொடுத்தும் ரசிக்க வைத்தார். 


"நான் பார்த்ததிலேயே மிகவும் வலிமையான பெண்"  


இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது தாய் மல்லிகா சுகுமாரன் குறித்து உணர்ச்சிவசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை மல்லிகா சுகுமாரன் சினிமா துறையில் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரித்வி ராஜ், “நான் பார்த்ததிலேயே மிகவும் வலிமையான பெண் என் அம்மா (மல்லிகா சுகுமாரன்) தான். சினிமாவில் 50 ஆண்டுகள் பணியாற்றுவது ஒன்று  அதியசம் இல்லை. ஆனால், 25 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி, இல்லத்தரசியாக இருந்தார் என் அம்மா. பின்னர், சினிமாவில் ரீ எண்டரி கொடுத்து தனக்கான இடத்தை பதிவு செய்தார்.  இதற்கு நான் அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.


”தாயுடன் இணைந்து நடிப்பதில் பெருமையாக உள்ளது"


உலகத்தில் எத்தனை பேருக்கு இது நடக்கும் என்று தெரியவில்லை. தனது தாயுடன் இணைந்து நடிக்கவும், அவர் நடித்த திரைப்படத்தை தயாரித்து இயக்கவும் வாய்ப்பு கிடைத்த  ஒரே நபர் நான் தான் என்று பெருமையாக கூறுகிறேன். எனக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


என் தாயுடன் நடிக்கும்போது,  மிகவும் திறமையான கலைஞர் என்ற உணர்கிறேன். எப்போதும் எனது தந்தை இறப்பு என்னுடைய மனதில் இருக்கும். என் தந்தையின் அஸ்தியுடன் எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தேன். என் அம்மா வேறொரு வாகனத்தில் தனியாக இருந்தார்.


அந்த நேரத்தில், என் மனதில் ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது. என் அம்மா இப்போது என்ன செய்வார்? என்று கேள்வி எழுந்தது. தற்போது அதற்கு பதில் கிடைத்திருக்கிறது. என் அண்ணனும் நானும் அப்பா வடிவில் உங்கள் முன் இருக்கிறோம்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார் பிரித்விராஜ். பிரித்விராஜ் உணர்ச்சிவசப்பட்டு பேசிய போது அவரது தாய் மல்லிகா சுகுமாரன் கண்கலங்கினார்.