சமீப காலங்களில் ஜப்பானிய அனிமே திரைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஸ்டுடியோ ஜிப்லி (Studio Ghibli) நிறுவனம் சார்பாக ஹாயாவோ மியாஸாகி (Hayao Miyazaki) இயக்கும் படங்கள் தனித்துவமானவையாக பேசப்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு இவை குழந்தைகளுக்கு மட்டுமான பொம்மைப் படங்களாக தோன்றும், அதே நேரத்தில் ஜப்பானிய அனிமேக்கள் வாழ்க்கையைப் பற்றிய மிக ஆழமான கருத்துக்களை பேசுகின்றன.


இந்தப் படங்களின் காட்சியமைப்புகள் மிக நுணுக்கமாக அனுபவங்களை பார்வையாளர்களுக்கு தருகின்றன. அனிமே படங்களை புரிந்துகொள்ளும் முயற்சியாக ஸ்டுடியோ ஜிப்லியின் படங்களை ஒவ்வொரு வாரமும் பார்க்கலாம். இந்த வரிசையில் முதலாவதாக 1997ஆம் ஆண்டு வெளியான பிரின்செஸ் மொனொனோகே (Princess Mononoke) படத்தைப் பற்றிய ஒரு சின்ன அறிமுகம்.




 


இளவரசி மொனொனோகே


1997ஆம் ஆண்டு டைட்டானிக் திரைப்படம் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. அதேநேரத்தில் பல்வேறு விருதுகளை வாரி குவித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு தகவல்தான். அதே ஆண்டில் டைட்டானிக் படத்திற்கு நிகராக மிகப்பெரிய அங்கீகாரம் பெற்று மிகப்பெரிய வசூல் ஈட்டிய படம்தான் இளவரசி மொனொனோகே.




இயற்கை Vs மனித வளர்ச்சி


14ஆம் நூற்றாண்டு ஜப்பானில் நடக்கிறது இந்தக் கதை. மனிதர்கள் ஒருபக்கமும் விலங்குகள் காட்டிற்குள்ளும் சமநிலையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த விலங்குகள் அனைத்தும் ஒவ்வொரு கடவுள்களாக பார்க்கப்படுகின்றன. திடீரென்று ஒரு நாள் ஒரு  கிராமத்திற்குள்  எங்கிருந்தோ வந்து சேரும் தீய ஆவியால் வசப்படுத்தப்பட்ட காட்டுப் பன்றி  ஒன்று வந்து மக்கள் அனைவரையும் கொல்ல வருகிறது.


இந்த கிராமத்தில் இளவரசனான அஷிடாகா மக்களைக் காப்பாற்ற அதை கொல்கிறான். அந்த விலங்கு தொட்டதால் அவனுக்கும் அந்த சாபம் பரவுகிறது. இந்த சாபத்தில் இருந்து விடுபட ஒரே வழி இந்த தீய விலங்கு எங்கிருந்து வந்ததென்று கண்டுபிடித்து அங்கு இருக்கும் பிரச்சனையை சரிசெய்வது மட்டுமே. இதனால் தனது ஊரைவிட்டு கிளம்புகிறான் இளவரசன் அஷிடாகா.


இதுவரை வெளி உலகத்தை பார்த்திராத அஷிடாகா உலகம் எவ்வளவு சமநிலை தவறியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்கிறான். மனிதர்கள் தங்களது பேராசைகளால் காடுகளை அழித்து காட்டின் தெய்வங்களை கோபம் அடையச் செய்துவிட்டிருக்கிறார்கள். அவற்றின் இருப்பிடங்களை விட்டு விலங்குகளை விரட்டியிருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த காட்டின் தெய்வங்கள் மனிதர்களை பழிவாங்க துடிக்கின்றன.


தனது  பயணத்தில்தான் அவன் இளவரசி மொனொனோகேவை சந்திக்கிறான். மனிதர்களால் கைவிடப்பட்டு  மோரோ என்கிற ஓநாய் தெய்வத்தால் வளர்க்கப்பட்ட பெண் என்பதால் அவள் மனிதர்களையே வெறுக்கிறாள். அவளது ஒரே குறிக்கோள் எபோஷியை கொலை செய்வதுதான். எபோஷி  என்கிற பெண் காட்டில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி இரும்பு உற்பத்தி செய்துவருகிறார். இது மூலமாக பல பெண்களுக்கு குடும்பங்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறார். தனது மக்களின் வளர்ச்சிக்காக காட்டை அழித்து வருகிறார்.




இப்படி மனிதர்களுக்கு இடையில் பல்வேறு காரணங்களினால் வெறுப்பு உருவாகி இருப்பதை பார்க்கிறார். அவர்களுக்கு இடையில் ஒரு சமநிலையை உருவாக்க முயற்சிக்கிறான். அதே நேரத்தில் தனது சாபத்தில் இருந்தும் அவன் விடுபட வேண்டும். இதுவே படத்தின் மையக் கதையாக இருக்கிறது.


பொதுவாகவே இரண்டு தரப்பான விவாதங்களை நாம் சமூகத்தில் பார்க்கலாம். ஒன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பரீதியிலான வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரான கருத்துக்களைத்தான்.. மற்றொன்று முற்றிலும் இயற்கைக்கு எதிரான வளர்ச்சிக்கு சார்பான கருத்துக்களைத்தான். ஆனால் இளவரசி மொனொனோகே படத்தின் மிக முக்கியமான அம்சமாக இருப்பது, இந்தப் படம் இந்த இரு தரப்பினருக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்கும் கதாநாயகனை மையமாக வைத்திருக்கிறது.


இளவரசன் அஷிடாகா அழகான தனது கிராமத்தை விட்டு வெளியே வந்து பார்ப்பது வெவ்வேறு சார்புகள் கொண்ட மனிதர்கள் ஒருவரின் மேல் ஒருவர் வளர்த்துக் கொள்ளும் வெறுப்புணர்ச்சியைதான். அதே வெறுப்புணர்ச்சியைத்தான் அவன் சாபமாக பெற்றிருக்கிறான். எப்போதெல்லாம் அவனுக்குள் மனிதர்களின் மேல் வெறுப்பு ஏற்படுகிறதோ, அப்போது சாபத்திற்கு அவன் கட்டுப்படுகிறான். இந்த வெறுப்பில் இருந்து விடுபடுவதே விலங்குகள் மற்றும் மனிதர்கள் இணைந்து ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வதற்கான வழியாக அவன் பார்க்கிறான்.




மரங்களின் ஆவி, குறியீடுகள்


மிகத் தீவிரமான ஒரு கதைக்களத்தை படம் பேசினாலும் மியாஸாகி இயக்கும் அனிமே படங்களின் மிகப்பெரிய பலமாக இருப்பது அவரது படங்களில் இருக்கும் உயிர்ப்புதான். இப்படி சொல்லலாம்... இளவரசி மொனொனோகே படத்தில், எல்லாமே கதாபாத்திரங்கள் தான். எல்லாவற்றுக்கும் அந்த உலகத்தில் உயிர் இருக்கிறது. மரங்களுக்கு உயிர் இருக்கிறது என்று நமக்கு தெரியும் அந்த மரங்களின் ஆவிகள் குட்டி குட்டி காளான்களைப் போல் கோடிக்கணக்கில் நம்மைச் சுற்றி இருக்கும்போது ஒரு காடு என்பது எத்தனை கோடிக்கணக்கான சின்ன உயிர்களால் நிறைந்திருக்கிறது என்பதை பார்வையாளர்களால் உணரமுடியும்.




அதேபோல் மிருகங்களில் ஒவ்வொன்றும், ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கான குறியீடுகளாக இருக்கின்றன. ஒரு மான் என்றால் கருணைக்கும், ஓநாய் என்றால் புத்திசாலித்தனத்திற்கும், முட்டாள்தனமான கோபத்தின் குறீயீடாக பன்றியும் என உயிர்களின் இயல்பை பிரதிபலிப்பவையாக இந்தக் கதாபாத்திரங்கள் இருக்கின்றன.


ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கதைகள், கதாபாத்திரங்கள், இன்றைய சூழலில் மிகப் பொருத்தமாக இருப்பதே இன்று வரை புதிய ரசிகர்களை ஈர்ப்பதற்கு காரணமாகும்.