அனுமதியின்றி திரையிடப்பட்ட சூர்யாவின் கருப்பு...தயாரிப்பாளர்கள் கண்டனம்
சூர்யாவின் கருப்பு திரைப்படம் அனுமதியின்றி மும்பை மற்றும் புனேவில் திரையிடப்பட்டதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்

இன்று வெளியாக இருந்த சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் கடன் பிரச்சனையால் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மும்பை மற்றும் புனேவில் கருப்பு திரைப்படத்தை சில திரையரங்குகள் திரையிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஒரு சில காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளன. இதனால் படத்தை திரையிட்ட க்யூப் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45 ஆவது படமாக உருவாகியுள்ள படம் கருப்பு. ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ். ஆர் பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார். இன்று மே 14 ஆம் தேதி கருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தயாரிப்பாளரின் கடன் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டது. சுமார் 140 கோடி பட்ஜெட்டில் கருப்பு திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த படத்தை வெளியிட படக்குழுவிற்கு சுமார் 100 கோடி ரூபாய் தேவை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
மும்பையில் திரையிடல்
தமிழ்நாட்டில் கருப்பு படத்திற்கு அதிகாலை 9 மணி காட்சிகள் திரையிடுவதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது. ஆனால் முதல் நாள் முதல் காட்சி பார்க்க காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு கருப்பு படம் இன்று வெளியாகாது என்கிற அதிர்ச்சி தகவலே கிடைத்தது. மறுபக்கம் மும்பை மற்றும் புனேவில் கருப்பு படத்தை ஒரு சில திரையரங்குகள் திரையிட்டுள்ளன. படத்தின் சில காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் பதற்றமான சூழல் நிலவியது. இதனை உடனே அறிந்த படக்குழு சம்பந்தபட்ட திரையரங்குகளை அனுகி படத்தை பாதியில் நிறுத்தினார்கள்.
தயாரிப்பாளர்கள் கண்டனம்
அனுமதியின்றி கருப்பு படத்தை திரையிட்டது குறித்து க்யூப் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று தென் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். தயாரிப்பாளர்கள் எஸ். ஆர் பிரபு , டி சிவா , கலைப்புலி எஸ் தானு ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் டி சிவா " கருப்பு திரைப்படம் சுமார் ரூ140 கோடி பட்ஜெட் செலவில் உருவாகியுள்ளது. பல்வேறு நிதி பிரச்சனைகள் காரணமாக தமிழ்நாட்டில் இப்படம் வெளியாகாத சூழல் நிலவியபோது வடமாநிலங்களில் மும்பை , புனே மற்றும் வாரனாசியில் இப்படம் அனுமதியில்லாமல் திரையிடப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் வெளியான வீடியோக்களைப் பார்த்து நாங்களே இடத்தை கண்டுபிடித்து க்யூப் நிறுவனத்தை தொடர்புகொண்டு படத்தை பாதியில் நிறுத்தினோம். க்யூம் நிறுவனத்திடம் இது குறித்து கேட்கையில் அவர்கள் ஒரு ஊழியர் தவறுதலாக படத்தை திரையிட கே.டி.எம் வழங்கியதாக கூறுகிறார்கள். ஒரு திரைப்படத்திற்கு அதிகபட்ச பாதுகாப்பாக க்யூப் நிறுவனம் கருதப்படுகிறது. ஆனால் அப்படியான ஒரு நிறுவனம் இந்த மாதிரியான தவறை செய்திருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இதனால் எங்களது கண்டனத்தை பதிவு செய்கிறோம். எவ்வளவு நேரம் படம் திரையிடப்பட்டது. இதன் பைரஸி இன்று இரவு வருமா நாளை வருமா என்கிற அச்சம் இருந்து வருகிறது. 140 கோடி செலவிட்டு உருவாகியுள்ள கருப்பு படத்திற்கு ஜனநாயகன் படத்தின் நிலமை தானா என்கிற பல கேள்வி எழுந்துள்ளது. இதற்காக க்யூப் நிறுவனத்திடம் நிச்சயம் நஷ்ட ஈடு கோர இருக்கிறோம். " என கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















