பிரபல நடிகர் பிரதீப் ராவத் மறைந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், அவரது மகன் விக்ரமாதித்யா ராவத் வீட்டின் முன்பு பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டிருந்தபோது சிரித்தபடி காணப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காட்சியை பார்த்த பலரும், தந்தையின் மரணத்துக்கு பிறகும் அவர் சிரிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பி, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Continues below advertisement

ஆனால், இதே நிகழ்வைச் சேர்ந்த மற்றொரு வீடியோவில் விக்ரமாதித்யா உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி காணப்படுகிறார். இதனால், கேமராக்கள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் அவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் சிரித்திருக்கலாம் என்றும், அந்த ஒரு காட்சியை மட்டும் வைத்து அவரது துக்கத்தை மதிப்பிடுவது சரியல்ல என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதீப் ராவத்தின் மரணம்

பிரதீப் ராவத் ஆகஸ்ட் 4ஆம் தேதி தனது 74வது வயதில் உயிரிழந்தார். நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த அவருக்கு நோய் மீண்டும் தீவிரமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மகன் விக்ரமாதித்யா, தந்தையின் இறுதி தருணங்களை நினைவுகூரும்போது, மருத்துவர்கள் அவருக்கு CPR வழங்கியதை பார்த்தபோதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரதீப் ராவத் இந்திய சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களுக்காக தனி அடையாளத்தை உருவாக்கியவர். இந்தி திரையுலகில் லாகான், சர்ஃபரோஷ், கஜினி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடரில் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.

தமிழில் நடித்த் படங்கள்

தமிழ் சினிமாவிலும் பிரதீப் ராவத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தொட்டி ஜெயா, கஜினி, சபரி, வாத்தியார், அசல் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக சூர்யா நடித்த கஜினி படத்தில் லக்ஷ்மண் மற்றும் ராம் என்ற இரட்டை வேடங்களில் அவர் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் எலி, ஜில்லா, வீரம், குலுகுலு, டிடி ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிப் படங்களிலும் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களில் தோன்றியவர் பிரதீப் ராவத்.