‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் ‘பிக்பாஸ் 7’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விஜய் வர்மா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா சென்னையில் நடைபெற்றது. Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
டார்க் ஹியூமர் பின்னணியில் திரில்லர் – காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. விஜய் வர்மாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர் ராகுலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா G.K படத்தொகுப்பை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியையும், யுகபாரதி பாடல்களையும் கவனிக்கின்றனர். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
பூஜை விழாவில் பேசிய பிரபு, ஃபிராங்க்ளின் ஜேக்கப் கூறிய வித்தியாசமான கதைக்களம் தன்னை கவர்ந்ததாக தெரிவித்தார். புதிய தலைமுறை படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி இருப்பதாகவும், இப்படம் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என நம்புவதாகவும் கூறினார்.
விஜய் வர்மா பேசும்போது, இந்தப் படத்திற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாகவும், அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக தானும் இருந்ததாகவும் தெரிவித்தார். தற்போது படம் உருவாகும் நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
இயக்குநர் பா. ரஞ்சித், ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் அணுகுமுறை தனித்துவமானது என்றும், இப்படம் வித்தியாசமான களத்தில் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ‘டிசி’ படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திலும் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் ஃபிராங்க்ளினின் திறமையை பாராட்டியதுடன், இப்படத்தின் கதை மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னையில் தொடங்கவுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
