‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ என அழைக்கப்படும் பிரபுதேவா நடனத்தில் ஒரு புதிய ட்ரெண்ட்செட் செய்தவர். இன்று டான்ஸ் மீது ஆர்வம் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு மிகப்பெரிய  ஒரு இன்ஸபிரேஷனாக இருந்து வருபவர் பிரபுதேவா என்றால் அது மிகையல்ல. ஒரு டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக விளங்கும் பிரபுதேவா நடன திறமையை யாருடனும் ஒப்பிட முடியாது. இன்று பிறந்தநாள் காணும் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம். 

Continues below advertisement

நடனப்புயல்

பிரபுதேவா தன் நடனத் திறமைக்கு அங்கீகாரமாக இரண்டு தேசிய விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வென்றுள்ளார். பாரம்பரிய இந்திய நடனத்தை இன்றைய சமகால காலகட்டத்திற்கு ஏற்ப வடிவமைத்து அதில் தன்னுடைய சிக்நேச்சர் ஸ்டேப்கள் சேர்த்து ஒரு மேஜிக் ஏற்படுத்திவிட கூடியவர். அவர் தன்னுடைய நடனத்தால் எந்த அளவிற்கு அறியப்படுகிறாரோ அதே அளவுக்கு அவரின் நடிப்பு திறமையும் அபாரமானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களில் மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார்.

 

Continues below advertisement

தன்னுடைய தந்தை சுந்தரம் மாஸ்டரிடம் இருந்து நடனத்தை கற்று கொண்ட பிரபுதேவா முறையாக பரதநாட்டியம் முதல் மேற்கத்திய ஹிப் ஹாப் நடனம் வரை அனைத்தையும் கற்று தேர்ந்துள்ளார். இவரின் சகோதரர்களான ராஜூ சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் இருவருமே டான்ஸ் மாஸ்டராக, நடிகர்களாக இருந்து வருகிறார்கள். 

30 ஆண்டு திரைப்பயணம்

பிரபுதேவா இந்த உச்சகட்ட இடத்தை அடைந்ததற்கு பின்னால் பல ஆண்டுகால கடுமையான முயற்சியும், உழைப்பும் அடங்கியுள்ளது. முதலில் அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டராக திரை வாழ்க்கையை தொடங்கிய பிரபுதேவாவுக்கு நடிகர் கமல்ஹாசனின் 100வது படமான 'வெற்றிவிழா' படம் தான் முதல் படம். 1994ம் ஆண்டு பவித்ரன் இயக்கத்தில் வெளியான 'இந்து' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அவரின் நடனம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. 'காதலன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து நான்கு பிரிவுகளின் கீழ் தேசிய விருதை தட்டியது. அப்படத்தில் இடம்பெற்ற ஊர்வசி, முக்கால முக்கபிலா பாடல் அவரின் புகழை உச்சிக்கு எடுத்து சென்றது. 

 

அதை தொடர்ந்து ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, வி.ஐ.பி, ஏழையின் சிரிப்பில், வானத்தை போல, காதலா காதலா, மனதை திருடிவிட்டாய், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் நடிகர் பிரபுதேவா நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.175 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அதிக சம்பளம் பெறும் நடன இயக்குநர்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடன இயக்குநர்களில் ஒருவரான பிரபுதேவாவின் பெரும்பாலான சொத்துக்கள் அவர் டான்ஸ் மாஸ்டராக சம்பாதித்தது தான். திரைப்படங்களில் நடித்து வருவதுடன் விளம்பரப் படங்கள், ஒரு சில டான்ஸ் சார்ந்த ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வருகிறார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 2 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. தற்போது விஜயுடன் GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

மும்பையில் கிரீன் ஏக்கர்ஸ் என்ற இடத்தில் வசித்து வருகிறார் பிரபுதேவா எனக் கூறப்படும் நிலையில் மைசூரிலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள தியோராவில் அவருக்கு ஒரு பெரிய பண்ணை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் Benz GLE கிளாஸ், BMW , ஆடி Q7 , Bentley கான்டினென்டல் உள்ளிட்ட காஸ்ட்லியான சொகுசு கார்களை வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.