'பொன்னியின் செல்வன்' படத்தில்  நடிகர் கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.


மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படம் குறித்த  அப்டேட்கள் இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து வர உள்ளன.


ஒற்றன், சாகசக்காரன், வந்தியத்தேவன்


அந்த வகையில், முன்னதாக நடிகர் விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது கார்த்தியின் வந்தியத்தேவன் போஸ்டர் வெளியாகி உள்ளது.


"ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், ஒற்றன், சாகசக்காரன்... இதோ வந்தியத்தேவன்!” எனக் குறிப்பிட்டு கார்த்தி கதாபாத்திர புகைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. 


 






கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


விக்ரமின் ’ஆதித்த கரிகாலன்’ கதாபாத்திரம்


முன்னதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மெட்ராஸ் டாக்கீஸ், ’வருகிறான் சோழன்’ எனும் கேப்ஷனுடன் படம் குறித்த பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தது. அதில் வரும் வாரம் முழுவதும் 'பொன்னியின் செல்வன்' படம் குறித்த அப்டேட்கள் வழங்கப்படும் என்றும், ”சாகசங்கள் நிறைந்த வாரத்துக்குத் தயாராகுங்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி, நேற்று (ஜூலை.04) ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் நடிகர் விக்ரமின் தோற்றம் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றது. “சோழ பட்டத்து இளவரசரை வரவேற்கிறோம்! கடுமையான போர்வீரன். காட்டுப் புலி. ஆதித்த கரிகாலன்!” எனக் குறிப்பிட்டு இந்தப் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்திருந்தது.


 






’பொன்னியின் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.